புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு


புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 28 Dec 2018 11:30 PM GMT (Updated: 28 Dec 2018 9:40 PM GMT)

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோட்டூர் அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ள சித்தமல்லி ஊராட்சி அண்ணாநகர், ஏ.கே.எஸ். நகர், ஜீவாநகர், பாலகிருஷ்ணாபுரம், பட்டவெளி, சோத்திரியம், சித்தமல்லி, நொச்சியூர் ஊராட்சி பால வாய், விளாத்திவெளி, கோவில்சித்தமல்லி, கிளார்வெளி, சமத்துவபுரம், நொச்சியூர், கும்மட்டித்திடல் ஊராட்சி புத்தகரம், காரைத்திடல், மேட்டாங்குளம், கும்மட்டிதிடல், செருகளத்தூர் ஊராட்சி வண்டல்வெளி, செருகளத்தூர் ஆகிய கிராமங்களில் கஜா புயலால் ஏழை, எளிய மக்களின் குடிசை வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குடிசை வீடுகளுக்கு இப்போது வழங்கும் நிவாரண தொகை போதாது. நிவாரணத்தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாடி வீடுகளையும் கணக்கில் சேர்த்து நிவாரண தொகை வழங்க வேண்டும். மேற்கண்ட கிராமத்தில் 2,250 ரேஷன் கார்டுகள் உள்ளன. அனைவருக்கும் அரசு அறிவித்த 27 பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டகம் வழங்க வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கும், இறந்த ஆடு, மாடுகளுக்கும், சாய்ந்த தென்னை மரங்களுக்கும் அரசு அறிவித்த இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இதுவரை எந்த நிவாரணமும் வழங்காததை கண்டித்தும் நேற்று சித்தமல்லி கடைத்தெருவில் அண்ணா சிலை அருகில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி துணை தாசில்தார் சந்திரமோகன், பெருகவாழ்ந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story