புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையினர் நடவடிக்கை


புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Jan 2019 11:15 PM GMT (Updated: 8 Jan 2019 7:43 PM GMT)

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் சுமார் 254 விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஜோசப் (வயது 56) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராணிஸ்சன் (36), மணிகண்டன் (33), ராஜா (34), விஜி (30) ஆகிய 4 பேரும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 4 மீனவர்களையும், அவர்களது விசைப்படகுடன் கைது செய்து இலங்கையில் உள்ள காங்கேசன் ராணுவ முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கடந்த 5-ந்தேதி ஜெகதாப்பட்டினத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு ஒன்று என்ஜின் பழுது காரணமாக நடுக்கடலில் நின்றது. இதனால் அதில் சென்ற 4 பேரையும், வேறு படகு மூலம் கரைக்கு கொண்டு வருவதற்காக ஜெகதாப்பட்டினத்தில் இருந்து மற்றொரு விசைப்படகு சென்றது. ஆனால் அங்கு சென்று பார்த்தபோது அவர்கள் அங்கு இல்லை. பின்னர் விசாரித்தபோது அந்த படகில் சென்ற 4 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரியவந்தது.

இதில் அந்த படகில் மீன்பிடிக்க சென்ற ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த சதிஷ் (33), அஜீத் (24), தர்மராஜ் (47), ராமச்சந்திரன் (45) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்கள் சென்ற விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறை பிடிக்கப்பட்ட 8 மீனவர்களையும் மீட்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று மீனவர்களது குடும்பத்தினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேரை கைது செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story