ரெயில் மோதி இறந்தவர் வழக்கில் திடீர் திருப்பம் நண்பரே கொலை செய்து தண்டவாளத்தில் வீசிய கொடூரம்


ரெயில் மோதி இறந்தவர் வழக்கில் திடீர் திருப்பம் நண்பரே கொலை செய்து தண்டவாளத்தில் வீசிய கொடூரம்
x
தினத்தந்தி 16 Jan 2019 11:45 PM GMT (Updated: 16 Jan 2019 7:53 PM GMT)

ரெயில் மோதி இறந்தவர் வழக்கில் திடீர் திருப்பமாக நண்பரே கொலை செய்து தண்டவாளத்தில் வீசியது 2 ஆண்டுகளுக்கு பின்னர் தெரியவந்தது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்புகுளம் அருகே உள்ள ஓபசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த முனிவேல் என்பவரின் மகன் பிரபு (வயது 24). இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற் பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 2017–ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரபு திடீரென மாயமானார். இது குறித்து அன்றைய தினத்தில் சப்–இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

2017–ம் ஆண்டு ஜனவரி மாதம் 13–ந் தேதி கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்ட நிலையில் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் 24 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ரெயில்வே போலீசாரின் தொடர் விசாரணையில், தண்டவாளத்தில் பிணமாக கிடந்தது காணாமல் போன ஓபசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஊழியர் பிரபு என்பது ஒரு வாரத்திற்கு பின்னர் தெரியவந்தது. இதனையடுத்து காணாமல் போன பிரபு குறித்த வழக்கை ஆரம்பாக்கம் போலீசார் முடித்து வைத்தனர்.

இந்த நிலையில் கடந்த 14–ந் தேதி கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் தேர்வழி கிராமத்தை சேர்ந்த விவசாயி துரை (45) என்பவரை கத்தி முனையில் மிரட்டி வாலிபர் ஒருவர் பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவரை பிடித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கும்மிடிப்பூண்டி பஜாரை சேர்ந்த கணபதி (31) என்பதும், அவர் ஏற்கனவே ஒரு கொலை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ள திடுக்கிடும் தகவலும் வெளியானது.

அதாவது, கடந்த 2017–ம் ஆண்டு ஜனவரி 12–ந் தேதி இரவு தனது நண்பரான ஓபசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஊழியர் பிரபுவை கும்மிடிப்பூண்டி தாமரை ஏரிக்கு வரவழைத்து மது வாங்கி கொடுத்து முன்விரோதம் காரணமாக அவரை கல்லால் தாக்கி கொலை செய்ததும், உடலை அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் வீசியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனியார் தொழிற்சாலை ஊழியர் பிரபு, முன் விரோதம் காரணமாக தனது நண்பரால் கொலை செய்யப்பட்டு ரெயில் தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் தற்போது துப்பு துலங்கி இருப்பது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த கும்மிடிப்பூண்டி போலீசார் தனியார் தொழிற்சாலை ஊழியரை முன் விரோதம் காரணமாக கொலை செய்து ரெயில் தண்டவாளத்தில் வீசிய வாலிபர் கணபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story