வெளியூர் மீனவர்களை வெளியேற்ற வலியுறுத்தி மண்டபத்தில் மீனவர் சங்கங்கத்தினர் உண்ணாவிரதம் முழு கடையடைப்பு


வெளியூர் மீனவர்களை வெளியேற்ற வலியுறுத்தி மண்டபத்தில் மீனவர் சங்கங்கத்தினர் உண்ணாவிரதம் முழு கடையடைப்பு
x
தினத்தந்தி 5 Feb 2019 10:45 PM GMT (Updated: 5 Feb 2019 10:41 PM GMT)

வெளியூர் மீனவர்களை வெளியேற்ற வலியுறுத்தி அனைத்து மீனவர் சங்கங்கள் சார்பில் உண்ணாவிரதம் மற்றும் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பனைக்குளம்,

மண்டபம் வடகடல் பகுதியான கோயில்வாடி கடற்கரையில் தங்கச்சிமடம், பாம்பன் விசைப்படகு மீனவர்கள் தங்குதளம் அமைத்து வாரம் 3 முறை மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடல் வளத்தை பாதிக்கும் இரட்டைமடி வலை மீன்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை முற்றிலும் தடுக்க வேண்டும் எனவும் மண்டபம் மீனவர் நலச்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் மீன்வளத்துறை அதிகாரிகள் உடந்தையால் இரட்டைமடி வலை மீன்பிடிப்பு மண்டபம் கடல் பகுதிகளில் தொடர்வதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் இரட்டை வலை மீன்பிடி விவகாரம் தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் கோயில்வாடியை சேர்ந்தவரின் படகில் ரோந்து சென்றுள்ளனர். இதனால் இரட்டைமடி வலையை பயன்படுத்தும் விசைப்படகு உரிமையாளர்களுக்கும், கோயில்வாடி பகுதி மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.

அதனை தொடர்ந்து இதுகுறித்து சமரச பேச்சுவார்த்தை நடத்த மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்களை ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் அலுவலகத்துக்கு பேச்சுவார்த்தை நடத்த அழைத்துள்ளனர். அங்கு குறைந்த எண்ணிக்கையில் சென்ற மண்டபம் மீனவர்களை பாம்பன், தங்கச்சிமடம் பகுதி மீனவர்கள் தாக்க முயன்றனராம். இதனால் சமரச கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த பிரச்சினையில் நிரந்தர தீர்வு காணுவது தொடர்பாக மண்டபம் அனைத்து மீனவர் நலச்சங்கங்கள், வர்த்தக சங்கம், அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் மண்டபம் வடக்கு கடற்கரையில் நடந்தது. கூட்டத்தில், இரட்டைமடி வலை மீன்பிடிப்புக்கு உடந்தையாக செயல்படும் மீன்வளத்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். மண்டபத்தில் தங்குதளம் அமைத்து மீன்பிடிப்பில் ஈடுபடும் மண்டபம் முகவரியில்லாத விசைப்படகுகளை அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வேண்டும், விசைப்படகு உரிமையாளர்கள் 10 பேர் மீதான பொய் வழக்கை மீன்வளத்துறை அதிகாரிகள் திரும்ப பெற வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் மண்டபம் மீனவர்களையும், படகு உரிமையாளர்களையும் தாக்க முயன்ற வெளியூர் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்களின் விரோத போக்கை கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது எனவும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி கடந்த 4 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மேலும் நேற்று மண்டபத்தில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மண்டபத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மண்டபம்–ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பந்தல் அமைக்கப்பட்டு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் தங்கமரைக்காயர், விசைப்படகு உரிமையாளர் இக்பால் மரைக்காயர், மத்திய சங்க தலைவர் கணபதி, தி.மு.க. நகர் செயலாளர் ராஜா, முன்னாள் கவுன்சிலர்கள் மைதீன், சம்பத் ராஜா, காந்தகுமார், முகைதீன் ஆண்டவர் ஜமாத் தலைவர் ஷாஜகான் மரைக்காயர், மண்டபம் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர்கள் நம்புராஜன், நாகராஜன், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் பூவேந்திரன், மீனவர் சங்க பிரதிநிதிகள் பாலசுப்பிரமணியன், விஜயரூபன், ஜாகீர் உசேன், அ.தி.மு.க. நகர் தலைவர் சுப்பிரமணியன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஆறுமுகம், பார்த்திபன், பா.ஜ.க. நகர் தலைவர் கோவிந்தராஜன், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ராஜூ, பாரம்பரிய மீனவர் தொழிலாளர் அணி நிர்வாகி அப்துல் காதர், பாரம்பரிய மீனவர் சங்கம், மண்டபம் மீனவர் சங்கம், தேசிய மீனவர் சங்கம், விசைப்படகு மீனவர் நலச்சங்கம், விசைப்படகு மீனவர் முன்னேற்ற சங்கம், கடல் தாய் மீனவர் சங்கம், செம்மீன் மீனவர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் என 1,500–க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதத்தையொட்டி ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீனவர் பிரச்சினை தொடர்பாக ராமநாதபுரத்தில் உயர் அதிகாரிகள் தலைமையில் சமாதான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது.

மீனவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து மண்டபம் பகுதியில் ஓட்டல்கள், பேக்கரி, பலசரக்கு கடைகள், பெட்டிக்கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் ராமேசுவரம் செல்ல ரெயில் மூலம் வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மண்டபத்தில் உணவு, தண்ணீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டனர்.


Next Story