சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் தொடர் போராட்டம் இன்று தொடங்குகிறது


சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் தொடர் போராட்டம் இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 10 Feb 2019 11:00 PM GMT (Updated: 10 Feb 2019 10:44 PM GMT)

சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகள் மற்றும் அதனை சார்ந்த தொழிலில் தொடர்புடையவர்கள் இன்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

சிவகாசி,

சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருட்களை பட்டாசு தயாரிக்க பயன்படுத்த கூடாது என்றும், பசுமை பட்டாசுகள் தான் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதால் கடந்த நவம்பர் மாதம் 13–ந்தேதி முதல் பட்டாசு ஆலைகள் பூட்டி கிடக்கிறது. இதனால் இந்த தொழிலில் நேரடியாக ஈடுபட்டு வந்த 4 லட்சம் தொழிலாளர்கள் உள்பட 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசுக்கு விதித்த கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கடந்த 2 மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், வேதிப்பொருட்கள் விற்பனை செய்யும் டீலர்கள், பட்டாசு களை கொண்டு செல்லும் லாரி நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பட்டாசு தொழில் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்புக்குழு நிர்வாகிகள் போராட்டத்துக்கு அனுமதி கேட்டு மனு கொடுத்தனர். அதில் தொடர் போராட்டத்தை விருதுநகர்–சிவகாசி ரோட்டில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடத்த இருப்பதாக கூறி இருந்தனர். இந்த போராட்டத்துக்கு, சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் தொடர் போராட்டம் குறித்த அறிவிப்புகள் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் சிவகாசியை சுற்றியுள்ள பகுதிகளில் காப்பாற்றுங்கள், பட்டாசு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கவும் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.


Next Story