வனப்பகுதியில் தீ வைத்தால் குண்டர் சட்டத்தில் கைது - கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை


வனப்பகுதியில் தீ வைத்தால் குண்டர் சட்டத்தில் கைது - கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 Feb 2019 11:30 PM GMT (Updated: 26 Feb 2019 10:36 PM GMT)

வனப்பகுதியில் தீ வைத்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காட்டுத்தீ எரிந்தது. இதில் ஏராளமான செடி, கொடிகள், மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதனிடையே காட்டுத்தீ ஏற்பட காரணமாக இருந்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் இதுகுறித்து கலெக்டர் ரோகிணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஏற்காடு மலையில் தொடர்ந்து காட்டுத்தீ எரிந்தது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக மலைப்பகுதி அருகே உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர்.

வனப்பகுதிக்குள் சென்று சமையல் செய்தல், புகை பிடிப்பது மற்றும் தீப்பற்ற வைப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மீறினால் குண்டர் சட்டத்தில் கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் ஏற்காடு காட்டுத்தீயினால் ஏற்பட்ட சேதம் மற்றும் வன உயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணியை வனத்துறை அதிகாரிகள் இன்று (அதாவது நேற்று) முதல் தொடங்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story