வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 21 March 2019 11:00 PM GMT (Updated: 21 March 2019 2:56 PM GMT)

பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும், வேறு யாருக்கும் சிறப்பு அதிகாரம் கிடையாது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

அ.தி.மு.க., பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம், நகர செயலாளர் சந்துரு, ஜெயசீலன் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், நிர்வாகிகள் எம்.ஆர்.காந்தி, முத்துராமன், கணேசன், தேவ், மீனாதேவ், த.மா.கா. கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஆர்.செல்வம், தே.மு.தி.க. மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி, புதிய தமிழகம், புரட்சி பாரதம், புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–


தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள கட்சி நிர்வாகிகள் நாடாளுமன்ற தேர்தலை எப்படி அணுக வேண்டும்? என்பது குறித்து பேசினோம்.

குமரி மாவட்டத்தின் 37 ஆண்டு கால அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு நாங்கள் முடிவு கட்டப்போகிறோம். மேலும் வெறுப்பு மற்றும் கசப்புணர்ச்சி, சாதி மத வேறுபாடுகள் அமைந்த நிலையை மாற்றி ஒற்றுமையோடு மக்கள் இணைய வேண்டும் என்பதும், குமரி மாவட்ட இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்கி முதலாளிகளாக மாற வேண்டும் என்பதும் தான் எங்களது இலக்கு. குமரி மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு தேவையான கட்டுமான பணிகளை கடந்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கொண்டு வந்துள்ளோம். 4 வழிச்சாலை பணிகள் இன்னும் 1½ ஆண்டுகளில் முடிக்கப்படும். 70 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 4 வழிச்சாலையில் 10 கிலோ மீட்டர் பணி முடிந்து விட்டது. ஆனால் அதை பயன்படுத்த கூடாது என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதால், அதை பயன்படுத்த முடியவில்லை.


4 ஆயிரம் கோடி செலவில் இரட்டை ரெயில்பாதை பணிகள் நடக்கின்றன. ஆனால் இரட்டை ரெயில்பாதை திட்டம் தொடங்கப்பட வில்லை என்ற தவறான கருத்தை மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இரட்டை ரெயில்பாதை பணிகள் இன்னும் 2½ அல்லது 3 ஆண்டுகளில் முடிந்துவிடும். நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் துறைமுக பணிகள் தொடங்கப்படும். மேலும் 3 மேம்பாலங்களுக்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அறிவிக்க கூடிய அதிகாரம் அகில இந்திய தலைமைக்கு மட்டும் தான் உண்டு. வேறு யாருக்கும் (எச்.ராஜா) சிறப்பு அதிகாரம் கிடையாது. அ.தி.மு.க.வில் 2 முக்கிய அமைச்சர்களுக்கு இடையே மோதல் போக்கு இருப்பதாக கூறுகிறீர்கள். ஆனால் இதுபற்றி எனக்கு தெரியவில்லை. கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.


பா.ஜனதா ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்தாலும் வெற்றி பெற இயலாது என்று கூறுகிறார்கள். அவ்வாறு கூறுபவர்கள், ஓட்டுக்கு நோட்டு கொடுத்து சிவந்த கரங்களை கொண்டவர்கள். ஓட்டுக்கு யாரும் பணம் கொடுக்க வேண்டாம். பணம் கொடுத்து மக்களை கொச்சைப்படுத்தாதீர்கள். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நியாயமாக கொடுக்க வேண்டிய அனைத்தையும் கொடுக்கவும், அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முயற்சிகள் நடக்கின்றன. தேர்தல் ஆணையம் கடுமையாக செயல்பட வேண்டும். ஒரு பைசா கொடுக்க கூட அனுமதிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story