நிலம் வாங்கி தருவதாக ரூ.1.21 கோடி மோசடி ஏஜெண்டு உள்பட 3 பேர் கைது


நிலம் வாங்கி தருவதாக ரூ.1.21 கோடி மோசடி ஏஜெண்டு உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 April 2019 10:30 PM GMT (Updated: 15 April 2019 8:13 PM GMT)

நிலம் வாங்கி தருவதாக கூறி போலி ஆவணம் மூலம் ரூ.1.21 கோடி மோசடி செய்த ஏஜெண்டு உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பையை சேர்ந்தவர் பிரவின் பாய். கட்டுமான அதிபர். இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஏஜெண்டான சந்திப் ஷா (60) என்பவரிடம் கோரேகாவில் உள்ள நிலத்தை வாங்கி தருமாறு கூறினார்.

இதையடுத்து அவர் நிலம் வாங்கி தருவதாக கூறி பிரவின் பாயிடம் இருந்து முன்பணமாக ரூ.1 கோடியே 21 லட்சத்தை வாங்கி உள்ளார். பின்னர் அவர் தனது கூட்டாளிகளான குல்கர்னி (56), தேவேந்திரா ராவ் (50) ஆகியோருடன் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து அவரிடம் கொடுத்து உள்ளார்.

இந்தநிலையில், பிரவின் பாய் ஆவணங்களை சரிபார்த்த போது அது போலியானது என்பதும், அந்த நிலம் வேறொரு நபருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.

இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏஜெண்டு சந்திப் ஷா, முன்னாள் வங்கி ஊழியர் குல்கர்னி, தேவேந்திரா ராவ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story