விருத்தாசலம் அருகே, நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த தி.மு.க. நிர்வாகி சிக்கினார்


விருத்தாசலம் அருகே, நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த தி.மு.க. நிர்வாகி சிக்கினார்
x
தினத்தந்தி 18 April 2019 10:45 PM GMT (Updated: 18 April 2019 9:43 PM GMT)

விருத்தாசலம் அருகே நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த தி.மு.க. நிர்வாகி சிக்கினார்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குப்பநத்தம் கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுரேஷ் குமார் தலைமையிலான குழுவினர் குப்பநத்தம் கிராமத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருவர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இதைபார்த்த அதிகாரிகள் அவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள டி.வி.புத்தூரை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி நடராஜன்(வயது 42) என்பது தெரியவந்தது. இதையடுத்து நடராஜனை விருத்தாசலம் போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்த ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர், சப்-கலெக்டர் பிரசாந்திடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story