6 மாதத்துக்கு பிறகு கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடக்கம்


6 மாதத்துக்கு பிறகு கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடக்கம்
x
தினத்தந்தி 18 May 2019 9:45 PM GMT (Updated: 18 May 2019 7:08 PM GMT)

கூடங்குளம் முதலாவது அணு உலையில் 6 மாதத்துக்கு பிறகு மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.

வள்ளியூர்,

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன், தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் முதலாவது அணு உலையில் கட்டுமான பணிகள் முடிந்து, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து மின்உற்பத்தி தொடங்கப்பட்டது.

பின்னர் அந்த அணு உலையில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி நள்ளிரவு முதல் வணிக ரீதியிலான மின்உற்பத்தி தொடங்கி, மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இதேபோன்று கூடங்குளம் 2-வது அணு உலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி மின்உற்பத்தி தொடங்கப்பட்டது. அங்கு கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி வணிக ரீதியிலான மின்உற்பத்தி தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ந்தேதி வருடாந்திர பராமரிப்பு பணிக்காகவும், எரிபொருள் நிரப்பும் பணிக்காகவும், முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தொடர்ந்து அந்த அணு உலையில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து, பல்வேறுகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.

முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு, 180 நாட்களுக்கு பிறகு அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12.10 மணிக்கு மீண்டும் மின்உற்பத்தி தொடங்கப்பட்டது. தற்போது முதலாவது அணு உலையில் 380 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இன்னும் ஓரிரு நாளில் மின்உற்பத்தி படிப்படியாக அதிகரித்து, முழு உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி இலக்கை அடையும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கூடங்குளம் முதலாவது அணு உலையில் 6 மாதத்துக்கு பிறகு மீண்டும் மின்உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது. கூடங்குளம் 2-வது அணு உலையில் தற்போது 575 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story