வெயிலின் தாக்கத்தால் காய்ந்து வரும் மரவள்ளி கிழங்குகள் விவசாயிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை


வெயிலின் தாக்கத்தால் காய்ந்து வரும் மரவள்ளி கிழங்குகள் விவசாயிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை
x
தினத்தந்தி 18 May 2019 10:30 PM GMT (Updated: 18 May 2019 8:33 PM GMT)

கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் வெயிலின் தாக்கத்தால் மரவள்ளிக் கிழங்கு செடிகள் காய்ந்து வருகிறது. இதையடுத்து விவசாயிகளுடன், அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

கிருஷ்ணராயபுரம்,

கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில், பரவலாக பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் பயிர் செய்த இந்த மரவள்ளிக்கிழங்கு பயிர் நன்கு வளர்ந்து வந்தது. இந்நிலையில், தற்போது செடிகள் வாட தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்தனர். இதனையறிந்த கரூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மோகன்ராம் தலைமையில், உதவி இயக்குனர் சாகுல் இம்ரான் அலி, வட்டார அலுவலர் கவிதா, மாவட்ட வேளாண் அறிவியல் மைய தொழில் நுட்ப வல்லுனர் கவி அரசு ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பந்தபட்ட பகுதிகளுக்கு சென்று மரவள்ளிக் கிழங்கு பயிர் செய்துள்ள வயல்களை பார்வையிட்டனர்.பின்னர் நீர் மற்றும் மற்றும் மண் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

வெயிலின் தாக்கம்

அந்த ஆய்வின் முடிவில் விவசாயிகளுக்கு அவர்கள் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அதன்படி செடிகள் வாட தொடங்கியதற்கு காரணம் நீரில் அதிக அளவு உள்ள உப்புதன்மையும், பருவம் தவறி நடவு செய்ததும் மற்றும் தற்போது நிலவும் கடுமையான வெயில் தாக்கமுமே ஆகும். இதைப்போக்க செடிகளுக்கு உவர் நீர் பாய்ச்சுவதை தவிர்த்து நல்ல நீரை பாய்ச்ச வேண்டும். ஏக்கருக்கு ஜிப்சம் 20 கிலோ என்ற அளவில் உரமிட வேண்டும். செடிகளில் உள்ள இலைகளின் மேல் நல்ல நீரை தெளிக்கவும் வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.


Next Story