வாலாஜா அருகே டீக்கடை உரிமையாளரை வேனை ஏற்றிக்கொன்ற கொடூரம்


வாலாஜா அருகே டீக்கடை உரிமையாளரை வேனை ஏற்றிக்கொன்ற கொடூரம்
x
தினத்தந்தி 21 May 2019 10:56 PM GMT (Updated: 21 May 2019 10:56 PM GMT)

வாலாஜா அருகே மாடுகளை திருடிச்சென்ற வேனை துரத்திச்சென்ற டீக்கடைக்காரர் வேனை ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

வாலாஜா,

வேலூர் மாவட்டம் வாலாஜா திரவுபதி அம்மன் கோவில் அருகே வசிப்பவர் ராமலிங்கம். இவர் மாடுகளை வளர்த்து வருகிறார். இவரது மகன் கோடீஸ்வரன் என்கிற கோட்டி (வயது 38), வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே டீக்கடை நடத்தி வந்தார். தந்தை வளர்த்து வரும் மாடுகளை கோடீஸ்வரனும் பராமரித்து வந்தார்.

இவர்களது மாடு உள்பட அதே பகுதியை சேர்ந்த பலரது மாடுகள் இரவு நேரத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் உள்ள மைதானத்தில் ஓய்வெடுக்கும். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் திரவுபதி அம்மன் கோவில் பகுதிக்கு பதிவு எண் இல்லாத சரக்கு வேனில் சிலர் வந்தனர். அவர்கள் கோவில் வளாகத்தில் இருந்த மாடுகளை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.

மாடுகள் கத்தும் சத்தம் கேட்டு அங்கு வந்த பெண்கள், மர்மநபர்கள் வேனில் அவற்றை ஏற்றுவதை பார்த்து கூச்சலிட்டனர். உடனே அருகில் வசிக்கும் முன்னாள் கவுன்சிலர் சுரேஷ் வெளியில் வந்து பார்த்து விட்டு தனது நண்பரான கோடீஸ்வரனுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இருவரும் இருசக்கர வாகனத்தில் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் 4 மாடுகளை வேனில் ஏற்றிய கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

இதனால் கோடீஸ்வரனும், சுரேசும் இருசக்கர வாகனத்தில் சரக்கு வேனை விரட்டி சென்றனர். இருப்பினும் வேன் அதிவேகமாக சென்றது. உடனே இருவரும் குறுக்கு வழியாக சென்று தேரடி பகுதியில் அந்த வேனை மடக்கி நிறுத்த முயன்றனர்.

அப்போது வேனில் இருந்தவர்கள் ஆத்திரம் அடைந்து வேனை நிறுத்தாமல் கோடீஸ்வரன் மீது வேனை ஏற்றிவிட்டு நிற்காமல் தப்பினர். இந்த சம்பவத்தில் கோடீஸ்வரன் ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் துடிதுடித்தார். உடன் வந்த சுரேஷ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அவ்வழியாக வந்த ஆட்டோவில் கோடீஸ்வரனை ஏற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி விட்டு சுரேஷ் வேனை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்றார். ஆனால் அந்த கும்பல் தப்பிவிட்டது.

இதற்கிடையே கோடீஸ்வரன் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலாஜாவில் இது போன்று திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மாடுகள் திருட்டை தடுக்க முயன்று வேனை விரட்டிச்சென்றபோது கோடீஸ்வரனை மர்மகும்பல் மாடுகள் திருடிய வேனை வைத்தே மோதி கொன்று விட்டு தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story