9 ஆண்டுகளுக்கு முன் நடந்த முதியவர் சாவில் திருப்பம் சொத்து தகராறில் மகனே கொன்றது அம்பலம்


9 ஆண்டுகளுக்கு முன் நடந்த முதியவர் சாவில் திருப்பம் சொத்து தகராறில் மகனே கொன்றது அம்பலம்
x
தினத்தந்தி 4 Jun 2019 11:00 PM GMT (Updated: 4 Jun 2019 9:16 PM GMT)

அருமனை அருகே 9 ஆண்டுகளுக்கு முன்பு முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பான விசாரணையில் சொத்து தகராறில் அவரது மகனே கொலை செய்து வீசியது தெரிய வந்தது. மேலும், கொலையை மறைக்க கூட்டாளியையும் தீர்த்து கட்டினார்.

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே ஆரையூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அருமனை அருகே தேமானூர் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய அருமனை போலீசார் நடத்திய விசாரணையில் முதியவர் கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. ஆனால், அவரை யார் கொலை செய்தது என்ற தகவல் தெரியவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக துப்பு துலங்காத நிலையில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் முதியவர் கிருஷ்ணனின் மகன் ஷாஜினின் நண்பன் வினு (வயது 41) கடந்த ஒரு மாதத்திற்கு முன் மாயமானார். இது குறித்து அவரது குடும்பத்தினர் கேரள மாநிலம் பாறசாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பாறசாலை போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்த நிலையில் ஷாஜி தலைமறைவானார்.

இதையடுத்து போலீசார் ஷாஜினின் செல்போன் சிக்னல்களை ஆராய்ந்த போது குமரி மாவட்ட எல்லையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

தந்தையை கொன்றார்

இதனையடுத்து ஷாஜியை சுற்றி வளைத்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. ஷாஜி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சொத்து தகராறில் தனது நண்பர் வினுவுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்தார். பின்னர், அவரது பிணத்தை அருமனை அருகே தேமானூரில் வீசி சென்றார்.

இந்த கொலை தொடர்பான விவரங்களை மறைப்பதற்காக வினு, ஷாஜியிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்தார். அவரது தொல்லையை தாங்க முடியாத, ஷாஜி கடந்த 20 நாட்களுக்கு முன் வினுவை வீட்டிற்கு அழைத்து அவரை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீட்டு தோட்டத்தில் புதைத்தார். பின்னர் குமரி மாவட்டத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் போலீசாரிடம் சிக்கினார்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பாறசாலை போலீசார், ஷாஜியும், அவருடன் இரண்டு கொலைகளுக்கும் உடந்தையாக இருந்த கூட்டாளி அனியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story