கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பா.ஜனதாவினர் காத்திருப்பு போராட்டம் ஓடை புறம்போக்கு கடைகளில் மின் இணைப்பை துண்டிக்க கோரிக்கை


கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பா.ஜனதாவினர் காத்திருப்பு போராட்டம் ஓடை புறம்போக்கு கடைகளில் மின் இணைப்பை துண்டிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 28 Jun 2019 10:15 PM GMT (Updated: 28 Jun 2019 8:11 PM GMT)

ஓடை புறம்போக்கு நிலத்தில் உள்ள கடைகளில் மின் இணைப்பை துண்டிக்க வலியுறுத்தி, கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பா.ஜனதாவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலத்தில் இருந்து லாயல் மில் மேம்பாலம் வரையிலும் நாற்கர சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சாலை விரிவாக்க பணிக்காக, கோவில்பட்டி மெயின் ரோடு பகுதியில் ஓடை புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கோவில்பட்டி நகரசபை நிர்வாகத்தினர், ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த கடைகளை அகற்றி விட்டு, அந்த கடைகளுக்கு தீர்வை வரியை ரத்து செய்தனர்.

இதேபோன்று கோவில்பட்டி கோட்ட மின்வாரிய அலுவலகமும், தீர்வை ரத்து செய்யப்பட்ட கடைகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பா.ஜனதாவினர் நேற்று கோவில்பட்டி கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகர தலைவர் வேல்ராஜா தலைமை தாங்கினார். நகர பொதுச்செயலாளர்கள் தினேஷ்குமார், பாலசுப்பிரமணியன், ஒன்றிய பொதுச்செயலாளர் மாரிமுத்து, மாநில விவசாய அணி செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட உள்ளாட்சி பிரிவு பொதுச்செயலாளர் பாலசீனிவாசன், பிரசார பிரிவு துணை தலைவர் லட்சுமணகுமார், தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் ஜீவானந்தம், இளைஞர் அணி துணை தலைவர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள், மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பானிடம் கோரிக்கை மனு வழங்கினர். மனுவை பெற்று கொண்ட அவர், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும், ஆக்கிரமிப்பு கடைகள் மீதான நடவடிக்கை குறித்து வருகிற 5-ந்தேதி எழுத்துப்பூர்வமாக பதில் அளிப்பதாகவும் உறுதி அளித்தார். இதையடுத்து பா.ஜனதாவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story