பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 12 Aug 2019 10:30 PM GMT (Updated: 12 Aug 2019 8:21 PM GMT)

பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

கரூர்,

இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆடு உள்ளிட்டவற்றை பலியிட்டு அதன் இறைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து ஒரு பங்கினை அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கினை ஏழை-எளியோருக்கும் கொடுத்து விட்டு மூன்றாவது பங்கினை தங்களது தேவைக்கும் முஸ்லிம்கள் பயன்படுத்துவது வழக்கம். அந்த வகையில் நேற்று பக்ரீத் பண்டிகையை ஒட்டி கரூர் கோவை ரோட்டில் உள்ள அத்தார் ஜமாத் ஈத்கா பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தொழுகையை பள்ளி வாசல் நிர்வாகிகள் பி.எஸ்.சர்புதீன், ஜாபர் உசேன் ஆகியோர் நடத்தினர். இதில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

கட்டித்தழுவி வாழ்த்து

தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். புத்தாடை அணிந்து கொண்டு மகிழ்ச்சியுடன் இதில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகளும் கை குலுக்கியும், ஒருவரையொருவர் கட்டி தழுவியும் வாழ்த்துக்களை பரிமாறியதை காண முடிந்தது. இதைத்தொடர்ந்து ஆடு உள்ளிட்டவற்றின் இறைச்சிகளை குர்பானியாக ஏழை-எளியோருக்கும், உறவினர்கள்-நண்பர்களுக்கு வழங்கியும் பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடினார்கள்.

பள்ளப்பட்டி ஈத்கா மைதானம்

கரூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருமாநிலையூர் திறந்தவெளி மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. இதைத்தொடர்ந்து உலகில் அமைதி நிலவுவதற்காக பாடுபடுவது, சகோதரத்துவத்தை பேணி காப்பது என இஸ்லாம் போதிக்கக்கூடிய அன்பினை பரிமாறி கொள்வது, தீவிரவாதத்திற்கு எதிராக தொடர் பிரசாரத்தினை மேற்கொள்வது என தொழுகையில் பங்கேற்றோர் உறுதியேற்றனர். இதில் மாவட்ட தலைவர் மதார்ஷா பாபு, செயலாளர் இருசாத் மற்றும் சுலைமான் சேட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல பள்ளப்பட்டி ஈத்கா மைதானம், அரவக்குறிச்சி ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் முஸ்லிம்கள் திரளானோர் கலந்துகொண்டு தொழுகை நடத்தினர். மாவட்டத்தில் வெங்கமேடு, வாங்கல், பசுபதிபாளையம், வெள்ளியணை, தோகைமலை, குளித்தலை உள்பட பல இடங்களில் பள்ளிவாசல்களில் நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. கரூர் மாவட்டத்தில் பள்ளி வாசல், திறந்தவெளி மைதானம் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. இதையொட்டி அங்கு அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story