எச்சில் துப்பியவரிடம் பணம் பறித்த மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 2 பேர் கைது
எச்சில் துப்பியவரிடம் பணம் பறித்த மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
பொது இடங்களில் குப்பை போடுதல், எச்சில் துப்புதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களிடம் மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் (கிளின்அப் மார்ஷல்கள்) அபராதம் வசூலித்து வருகின்றனர். இதில், தூய்மை பணியாளர்கள் பல இடங்களில் பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பதாக புகார்கள் வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் காட்கோபர் ரெயில்நிலையம் அருகில் 2 தூய்மை பணியாளர்கள் எச்சில் துப்பியதாக ஒருவரை மிரட்டி ரூ.400-ஐ பறித்தனர். பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.200 மட்டுமே அபராதம் ஆகும்.
இந்தநிலையில், அந்த வழியாக சென்ற ஒருவர், தூய்மை பணியாளர்கள் அந்த நபரிடம் பணம் பறிப்பதை பார்த்தார். அவர் 2 தூய்மை பணியாளர்களையும் பிடித்து காட்கோபர் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
விசாரணையில், அவர்களின் பெயர் கைலாஷ் ராய் மற்றும் இம்ரான் ஹூசேன் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் விடுமுறை நாளன்று காலாவதியான அடையாள அட்டையை வைத்து சீருடை அணியாமல் பணியில் இருந்ததும் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தூய்மை பணியாளர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story