சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 500 போலீசார் போலீஸ் சூப்பிரண்டு துரை பேட்டி


சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 500 போலீசார் போலீஸ் சூப்பிரண்டு துரை பேட்டி
x
தினத்தந்தி 14 Aug 2019 11:00 PM GMT (Updated: 14 Aug 2019 6:49 PM GMT)

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு துரை தெரிவித்துள்ளார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை அமைதியான முறையில் கொண்டாடிட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்ட எல்லை பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களில் உரிய சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவில், வழிபாட்டு தலங்கள், ரெயில் நிலையம் ஆகியவற்றில் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அமைதியான முறையில் சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழும் வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், வங்கிகள், மருத்துவமனைகள் உள்பட 30 இடங்களில் தீவிர கண்காணிப்பு, ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

வாகன சோதனை

மாவட்ட எல்லைகளில் 25 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தொடர் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உட்கோட்ட வாரியாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனிப்படையினர் லாட்ஜ், திருமண மண்டபம், சினிமா தியேட்டர் ஆகியவற்றை தணிக்கை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாரூர் தியாகராஜர் கோவில், ஆலங்குடி குருபகவான கோவில், மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில், முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்கா போன்ற முக்கிய வழிபாட்டு தலங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

ரோந்து பாதுகாப்பு

திருவாரூர், பேரளம், நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய முக்கிய ரெயில் நிலையங்கள் ஆகியவற்றில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் குழுவினர் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 29 போலீஸ் நிலைய சரகங்களிலும் மோட்டார் சைக்கிளில் வாகன ரோந்து மற்றும் 5 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். ரெயில் தண்டவாள பாதையில் ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story