குறைந்த விலைக்கு வீடு தருவதாக கூறி 350 பேரிடம் பணமோசடி செய்த கட்டுமான அதிபர் கைது


குறைந்த விலைக்கு வீடு தருவதாக கூறி 350 பேரிடம் பணமோசடி செய்த கட்டுமான அதிபர் கைது
x
தினத்தந்தி 14 Aug 2019 11:15 PM GMT (Updated: 14 Aug 2019 9:53 PM GMT)

குறைந்த விலைக்கு வீடு தருவதாக கூறி 350 பேரிடம் பணமோசடி செய்த கட்டுமான அதிபரை போலீசார் மும்பை டோங்கிரியில் வைத்து கைது செய்தனர். தலைமறைவாக இருந்த இவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்.

மும்பை,

நவிமும்பை பன்வெலை சேர்ந்தவர் சச்சின் ஜெண்டே. கட்டுமான அதிபராக இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் பன்வெல் தாலுகா பகுதியில் புதிதாக கட்டிடம் கட்ட இருப்பதாகவும், குறைந்த விலையில் வீடு தருவதாகவும் விளம்பரம் செய்து இருந்தார்.

இதனால் அப்பகுதியை சேர்ந்த 350 பேர் அவரிடம் வீடு பெறுவதற்கு முன்பணம் கொடுத்து பதிவு செய்தனர். ஆனால் குறிப்பிட்ட நாளில் வீடு அவர்களுக்கு ஒதுக்கி தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை சந்தித்து தங்களது பணத்தை திருப்பி கேட்டனர்.

அப்போது அவர் 187 பேருக்கு காசோலையை கொடுத்து உள்ளார். ஆனால் அந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், சச்சின் ஜெண்டே வீடு தருவதாக கூறி 350 பேரிடம் ரூ.50 கோடி அளவில் மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் அவர் தலைமறைவானது தெரியவந்தது.

இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவர் மும்பை டோங்கிரி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சச்சின் ஜெண்டேவை கைது செய்தனர்.

இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அவரை வருகிற 19-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

Next Story