மந்திராலயாவில் இன்று சுதந்திர தின விழா: முதல்-மந்திரி பட்னாவிஸ் தேசிய கொடி ஏற்றுகிறார்


மந்திராலயாவில் இன்று சுதந்திர தின விழா:  முதல்-மந்திரி பட்னாவிஸ் தேசிய கொடி ஏற்றுகிறார்
x
தினத்தந்தி 15 Aug 2019 12:00 AM GMT (Updated: 14 Aug 2019 10:05 PM GMT)

மந்திராலயாவில் இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தேசிய கொடி ஏற்றுகிறார். பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து மும்பையில் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

மும்பை,

நாட்டின் 73-வது சுதந்திர தினவிழா இன்று (வியாழக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்து உரையாற்றுகிறார்.

மராட்டிய அரசு சார்பில் அரசின் தலைமை செயலகமான நரிமன்பாயிண்டில் உள்ள மந்திராலயா வளாகத்தில் சுதந்திர தினவிழா நடக்கிறது. இதில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் காலை 8 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். பின்னர் அவர் சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார்.

இதேபோல கவர்னர் வித்யாசாகர் ராவ் புனே ராஜ்பவனில் உள்ள கவன்சில் ஹாலில் நடைபெறும் விழாவில் காலை 9.05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றுகிறார். மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு காரணமாக சுதந்திர தினமான இன்று மாலை ராஜ்பவனில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர தினவிழாவையொட்டி மராட்டியத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தபப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் வழக்கத்தைவிட போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. இதனால் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் மும்பை உள்பட மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த ஏற்கனவே உளவுத்துறை கூறியிருந்தது.

இதுகுறித்து மும்பை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பாதுகாப்பை பலப்படுத்துமாறு வழக்கமான எச்சரிக்கைகள் வந்து உள்ளன. எந்தவித அசம்பாவித சம்பவங்களையும் எதிர் கொள்ள தயாராக உள்ளோம். பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். முஸ்லிம்கள் அதிகம் உள்ள இடங்களில் பொது மக்களிடம் பேசி வருகிறோம். அமைதியையும், நல்லிணக்கத்தையும் காப்பாற்றுமாறு அவர்களிடம் கோரிக்கை விடுத்து உள்ளோம்.

மும்பையில் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் தவிர பயங்கரவாத தடுப்பு பிரிவினர், கலவர தடுப்பு பிரிவினர், அதிவிரைவு படையினர், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர், மோப்பநாய் பிரிவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

கேட்வே ஆப் இந்தியா, ராஜ்பவன், மந்திராலயா, மும்பை பங்கு சந்தை, மெரின் டிரைவ், ஜூகு கடற்கரை உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கடற்கரையோரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல குடிசைப்பகுதிகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர் மாளிகைகளையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ரெயில் நிலையங்கள் மற்றும் முக்கிய வழிப்பாட்டு தலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர மும்பையின் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சந்தேகத்துக்கு இடமாக சுற்றிதிரிபவர்களை பிடித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். தானே, பால்கர் மாவட்டங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Next Story