மனைவியை கொலை செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட விவசாயி காட்டில் பிணமாக கிடந்தார்


மனைவியை கொலை செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட விவசாயி காட்டில் பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 18 Sep 2019 11:00 PM GMT (Updated: 18 Sep 2019 8:56 PM GMT)

மனைவியை கொலை செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட விவசாயி காட்டில் பிணமாக கிடந்தார்.

உப்புக்கோட்டை,

தேனி மாவட்டம், உப்புக்கோட்டை அருகே உள்ள கூழையனூர் பூசாரி காலனி தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 55). விவசாயி. இவருடைய மனைவி பாரிஜாதம் (50). இவர்களுக்கு பார்த்திபன் என்ற மகனும், நித்யா என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இதில் நித்யாவின் வீட்டிற்கு பாரிஜாதம் சென்று இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை தனது வீட்டுக்கு வரும்படி நாகராஜ் அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதன் காரணமாக மனைவியிடம் நாகராஜ் பேசாமல் இருந்தார். இந்நிலையில் கடந்த 4-ந்தேதி நாகராஜ் தோட்டத்தில் பாரிஜாதம் வெட்டிக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பாரிஜாதத்தை வெட்டி கொலை செய்து விட்டு நானும் செத்துவிடுவேன் என்று நாகராஜ் கூறியதாக அவரது மகன் பார்த்திபன் போலீசில் கூறினார். மேலும் கொலை சம்பவத்திற்கு பின்னர் நாகராஜ் தலைமறைவாகி விட்டார். எனவே மனைவியை கொலை செய்துவிட்டு நாகராஜ் தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அவரை தேடி வந்தனர்.

விஷம் குடித்து தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை கூழையனூரில் உள்ள மல்லிங்கர் கரடு காட்டுப் பகுதியில் நாகராஜ் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் நாகராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்றும் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், இறந்து 5 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

எனவே அவருடைய உடலை அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நாகராஜ் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அவருடைய உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த கணவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story