சென்னை ஏ.டி.எம்.மில் பணம் திருடிய வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது நூதன முறையில் பல லட்சம் ரூபாய் திருடியது தெரியவந்தது


சென்னை ஏ.டி.எம்.மில் பணம் திருடிய வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது நூதன முறையில் பல லட்சம் ரூபாய் திருடியது தெரியவந்தது
x
தினத்தந்தி 5 Oct 2019 10:30 PM GMT (Updated: 5 Oct 2019 4:48 PM GMT)

அமைந்தகரையில் உள்ள ஏ.டி.எம். ஒன்றில் நூதன முறையில் பணம் திருடிய வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கும்பலாக சேர்ந்து கொண்டு பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

பூந்தமல்லி,

அமைந்தகரையில் அரசு பொதுத்துறை வங்கியான இந்திய ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். உள்ளது. இந்த வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் நேற்றுமுன்தினம் திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து வங்கி ஊழியர்கள் ஏ.டி.எம்.மையத்திற்கு சென்று எந்திரத்தை சோதித்து பார்த்தபோது, எந்திரத்தின் பின்பகுதியில் உள்ள ‘சுவிட்ச்’ அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், இரண்டு வாலிபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்கும்போது, உடன் இருக்கும் நபர் ஏ.டி.எம். எந்திரத்தின் பின்பக்கம் உள்ள சுவிட்சை அணைப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வங்கி மேலாளர் சார்பில் அமைந்தகரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உடனே போலீசார் வீடியோ காட்சிகளை வைத்து, அந்த மர்மநபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று மீண்டும் அந்த 2 நபர்கள் அதே ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க வந்தனர். அப்போது அங்கு இருந்த வங்கி ஊழியர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து அமைந்தகரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அண்ணா நகர் உதவி கமி‌ஷனர் சீனிவாசலு, அமைந்தகரை இன்ஸ்பெக்டர் நசிமா ஆகியோர் பிடிபட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் வடமாநில வாலிபர்கள் என்பதும், அவர்கள் நூதன முறையில் வங்கி ஏ.டி.எம்.மில் திருடியதும் தெரியவந்தது.

இதுகுறித்து பிடிபட்டவர்களிடம் மேலும் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:–

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜாகிர் (வயது 29), அப்சல் (20), ஆகிய இருவரும் ஒரு கும்பலாக சேர்ந்து கொண்டு தங்களிடம் உள்ள வங்கி கணக்குக்கு சொந்தமான ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி, பணம் எடுப்பார்கள். அப்போது பணம் வெளியே வர சில நொடிகள் இருக்கும் போது, உடன் வந்த நபர் ஏ.டி.எம் எந்திரத்தின் பின்பக்கம் உள்ள சுவிட்சை ஆப் செய்து விடுவார்.

 அப்போது அவர்கள் பதிவு செய்த பணம் மட்டும் வெளியே வரும். ஆனால் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்ததற்கான எஸ்.எம்.எஸ் (குறுந்தகவல்) ஏதும் வராது. பணத்தை எடுத்து முடித்தவுடன், இவர்களது கும்பலை சேர்ந்த கூட்டாளியான அந்த கார்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்து விடுவார்கள். இதையடுத்து ஏ.டி.எம். கார்டுக்கு சொந்தமான அந்த நபர் தனது பணம் வங்கி கணக்கில் எடுக்கப்பட்டு விட்டதாகவும், ஆனால் ஏ.டி.எம்.மில் இருந்து பணம் தனக்கு வரவில்லை என வங்கிக்கு ஆன்லைனில் புகார் தெரிவிப்பார்.

புகாரையடுத்து, நான்கு நாட்கள் கழித்து மீண்டும் சம்பந்தப்பட்ட அந்த வங்கி நிறுவனம் அவர்களது வங்கி கணக்கிற்கு அந்த பணத்தை திருப்பி செலுத்திவிடும். இவ்வாறு அவர்கள் கும்பலாக சேர்ந்து கொண்டு பல ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று நூதன மோசடி செய்து வந்தது தெரியவந்தது.

இதுபோல் கடந்த மாதம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்களிலிருந்து இருந்து பல லட்சம் பணத்தை சுருட்டியதாக அவர்கள் விசாரணையில் தெரிவித்தனர். அதேபோல் நூதன மோசடியை அமைந்தகரையில் அரங்கேற்றும் போது இருவரும் பிடிபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 20–க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story