அயோத்தி தீர்ப்பு எதிரொலி: நாகை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


அயோத்தி தீர்ப்பு எதிரொலி: நாகை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 9 Nov 2019 11:00 PM GMT (Updated: 9 Nov 2019 5:23 PM GMT)

அயோத்தி தீர்ப்பு எதிரொலியாக நாகை மாவட்டத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நாகப்பட்டினம்,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் எதிரொலியாக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் இரவு, பகலாக பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக நாகை மாவட்டத்தில் நாகூர், நாகை புதிய-பழைய பஸ் நிலையம், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், சிக்கல் சிங்காரவேலர் கோவில், கோடியக்கரை பூங்கா, பூம்புகார் சுற்றுலா தலம், தைக்கால், வேளாங்கண்ணி உள்பட 36 இடங்கள் பதற்றமானது என கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாகூர் தர்கா

இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தலமான நாகூர் தர்கா போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தர்காவிற்கு வரும் அனைவரும் பலத்த சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நாகூர் தர்காவின் அலங்கார வாசல், தர்கா பின்புறம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் புதுச்சேரியில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன. பின்னர் வாகனங்களின் பதிவு எண் மற்றும் வாகன ஓட்டுனரின் முகவரி, செல்பேசி எண் ஆகியவை பதிவு செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டன.


Next Story