பொன்னேரி போலீஸ் நிலையத்தில் மாடியில் இருந்து குதித்து பெண் போலீஸ் தற்கொலை முயற்சி


பொன்னேரி போலீஸ் நிலையத்தில் மாடியில் இருந்து குதித்து பெண் போலீஸ் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 8 March 2020 10:08 PM GMT (Updated: 8 March 2020 10:08 PM GMT)

பொன்னேரி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் போலீஸ் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதில், அவர் கால் முறிந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி போலீஸ் நிலையத்தின் மேல்தளத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சகுந்தலா என்பவர் சப்-இன்ஸ்பெக்டராகவும், இசக்கி மீனா (வயது 20) என்பவர் பெண் போலீசாகவும் பணியாற்றி வருகின்றனர்.

சப்-இன்ஸ்பெக்டர் சகுந்தலாவுக்கும், இசக்கி மீனாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலை பணியில் இருந்தபோது, மீண்டும் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த இசக்கி மீனா திடீரென போலீஸ் நிலைய மாடியில் இருந்து கீழே குதித்தார். பலத்த காயமடைந்த அவரை சக போலீசார் மீட்டு, சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், இசக்கி மீனாவின் காலில் முறிவு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே வேலைப்பளு காரணமாகவும், உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தினாலும் இசக்கி மீனா தற்கொலைக்கு முயன்றாரா? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

போலீஸ் நிலைய மாடியில் இருந்து குதித்து பெண் போலீஸ் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் போலீசார் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story