புதுவையில் வேகம் எடுத்த தொற்று: அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா - புதிதாக 245 பேருக்கு பாதிப்பு; உயிரிழப்பு 89 ஆனது


புதுவையில் வேகம் எடுத்த தொற்று: அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா - புதிதாக 245 பேருக்கு பாதிப்பு; உயிரிழப்பு 89 ஆனது
x
தினத்தந்தி 10 Aug 2020 11:30 PM GMT (Updated: 10 Aug 2020 11:25 PM GMT)

புதுவை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. புதிதாக 245 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. உயிரிழப்பு 89 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி, 

புதுவையில் தொடக் கத்தில் கொரோனா கட்டுக்குள் இருந்து வந்தது.

தளர்வுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு தொற்று வேகம் எடுத்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. முதலில் நூறாக இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக நாள்தோறும் 150 பேருக்கும் குறையாமல் தொற்றினால் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது இது 200-ஐ தாண்டியுள்ளது. சாவு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மாநிலத்தில் தொற்று பரிசோதனை அதிக அளவில் நடத்தப்பட்டு வருவதால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் 912 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 245 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 66 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 பேர் இறந்துள்ளனர்.

அதாவது ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்து உழவர்கரை நண்பர்கள் நகரை சேர்ந்த 66 வயது மூதாட்டியும், ஏனாம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 66 வயது முதியவரும் உயிரிழந்தனர்.

புதுவை மாநிலத்தில் இதுவரை 47 ஆயிரத்து 836 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 599 பேருக்கு இன்னும் பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. ஒட்டுமொத்தமாக 89 பேர் இறந்துள்ளனர். இதுவரை 5 ஆயிரத்து 624 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 2 ஆயிரத்து 180 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 3 ஆயிரத்து 355 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 360 பேர் அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் சென்டர்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி புதுவையில் 766 பேர், ஏனாமில் 53 பேர் என 819 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் 712 பேரும், அதற்கு முந்தைய நாள் 607 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா நோயாளிகளுக்காக தனியார் மருத்துவமனைகளில் 2 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் இதுவரை அது செயல்பாட்டிற்கு வரவில்லை. இதன் காரணமாகவே பெருமளவு நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்துவதாக கூறப்படுகிறது.

சாதாரண மக்களை மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் காரைக்கால் கலெக்டர் அர்ஜுன் சர்மாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தொடர் சிகிச்சையில் உள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே காரைக்காலில் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்று புதுவை மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவி சரண்யாவுக்கு நடந்த பாராட்டு நிகழ்ச்சியில் கலெக்டர் அர்ஜூன் சர்மாவுடன் மின்சாரம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் கலந்துகொண்டார். இந்தநிலையில் புதுவை திரும்பிய அவர் தனியாக இருந்து வந்தார்.

இதையொட்டி டாக்டர்கள் சுப்பையா சாலையில் உள்ள அமைச்சர் கமலக்கண்ணன் வீட்டிற்கு வந்து உமிழ்நீர் மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கமலக்கண்ணன் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஏற்கனவே சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜிப்மரில் சிகிச்சை பெற்ற அவர் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கடந்த சில நாட்களாக தனது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். கந்தசாமியின் மகன் விக்னேஷ், தாயார் ராஜம்மாள் ஆகியோருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தற்போது அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது அரசு வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான என்.எஸ்.ஜே.ஜெயபால் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் சிகிச்சை பெற்று சமீபத்தில்தான் வீடு திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story