தாடிக்கொம்பு அருகே லாரி டிரைவரை கட்டிப்போட்டு நகை- பணம் பறிப்பு


தாடிக்கொம்பு அருகே லாரி டிரைவரை கட்டிப்போட்டு நகை- பணம் பறிப்பு
x
தினத்தந்தி 24 Sep 2020 3:52 AM GMT (Updated: 24 Sep 2020 3:52 AM GMT)

தாடிக்கொம்பு அருகே லாரி டிரைவரை கட்டிப்போட்டு அவரிடம் இருந்த நகை-பணத்தை பறித்துச்சென்ற வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தாடிக்கொம்பு,

ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த நஞ்சைகோலாநல்லி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 30). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் இருந்து லாரியில் உப்பை ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். நள்ளிரவில் திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே நான்கு வழிச்சாலையில் உப்பாற்று ஓடை பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு லாரியை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக அருகே உள்ள புதரை நோக்கி சென்றார்.

அப்போது முகமூடி அணிந்து அங்கு வந்த 28 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் சிலர் அவரை எட்டி உதைத்து கீழே தள்ளினர். பின்னர் அவரை அருகில் இருந்த முட்புதருக்குள் இழுத்து சென்ற அவர்கள், அருண்குமார் அணிந்திருந்த உடையை கழற்றி கிழித்து அதை வைத்தே அவருடைய கண், கை மற்றும் கால்களை கட்டி போட்டனர். பின்னர் அவரிடம் இருந்த ½ பவுன் தங்க காசு, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறித்தனர்.

வலைவீச்சு

இதற்கிடையே அருண்குமாரின் லாரி நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில் மற்றொரு லாரி வந்து நிற்பதை பார்த்த அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அந்த லாரியில் வந்தவர்கள் இதை கவனித்து முட்புதருக்குள் சென்று பார்த்த போது, கண் மற்றும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அருண்குமார் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை காப்பாற்றினர். இதையடுத்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து அருண்குமார் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அழகர்சாமி, முனியாண்டி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து டிரைவரை கட்டிப்போட்டு நகை, பணத்தை பறித்துச்சென்ற வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story