தார்வாரில் இருந்து மும்பைக்கு லாரியில் கடத்திய ரூ.14 லட்சம் அரசு பால்பவுடர் பறிமுதல் டிரைவர் கைது


தார்வாரில் இருந்து மும்பைக்கு லாரியில் கடத்திய ரூ.14 லட்சம் அரசு பால்பவுடர் பறிமுதல் டிரைவர் கைது
x
தினத்தந்தி 12 Oct 2020 9:42 PM GMT (Updated: 12 Oct 2020 9:42 PM GMT)

தார்வாரில் இருந்து மும்பைக்கு லாரியில் கடத்தப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்பிலான பால் பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

பெலகாவி,

பெலகாவி மாவட்டம் பைலஒங்கலா போலீசார் ஒசகுந்தா பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு லாரி வந்து கொண்டு இருந்தது. அந்த லாரியை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அப்போது லாரிக்குள் அரசு நந்தினி பால் நிறுவனத்தின் 25 கிலோ எடையுள்ள 240 பால் பவுடர் மூட்டைகள் இருந்தன. ஆனால் அந்த பால் பவுடர் மூட்டைகளை கொண்டு செல்ல, லாரி டிரைவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை.

இதுகுறித்து அவரிடம் விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பால் பவுடர் மூட்டைகளை தார்வாரில் இருந்து மும்பைக்கு கடத்தியது தெரியவந்தது.

விசாரணை

இதையடுத்து 240 மூட்டை களில் இருந்த ரூ.14 லட்சம் மதிப்பிலான பால் பவுடரை போலீசார் பறிமுதல் செய்து கொண்டனர். மேலும் லாரி டிரைவரையும் போலீசார் கைது செய்தனர்.

பால் பவுடர் மூட்டைகளை நந்தினி பால் நிறுவனத்தில் இருந்து அனுப்பி வைத்தவர் யார்?, இதில் அதிகாரிகளுக்கு எதுவும் தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பைலஒங்கலா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story