முனிரத்னாவின் வெற்றிக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி


முனிரத்னாவின் வெற்றிக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 13 Oct 2020 9:54 PM GMT (Updated: 13 Oct 2020 9:54 PM GMT)

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முனிரத்னாவின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் (ஆர்.ஆர்.நகர்) தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முனிரத்னாவும், பா.ஜனதா சார்பில் துளசி முனிராஜ் கவுடாவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலின் போது முனிரத்னா, ஒரு வீட்டில் சட்டவிரோதமாக சுமார் பத்தாயிரம் வாக்காளர் அடையாள அட்டைகளை பதுக்கி வைத்திருந்ததாக புகார் எழுந்தது. அது தொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் அந்த வீட்டில் சோதனை நடத்தி வாக்காளர் அடையாள அட்டைகளை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

துளசி முனிராஜ் கவுடா மனு

இதையடுத்து அப்போது ராஜராஜேஸ்வரிநகர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. சிறிது நாட்களுக்குப் பிறகு அந்த தொகுதியில் மீண்டும் தேர்தல் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் முனிரத்னா போட்டியிட்டு வெற்றி பெற்றார். முனிரத்னாவின் வெற்றியை எதிர்த்து பா.ஜனதா வேட்பாளர் துளசி முனிராஜ் கவுடா கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதில் காங்கிரஸ் வேட்பாளர் சட்ட விரோதமாக செயல்பட்டு முறைகேடுகளில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார் என்றும், அந்த வெற்றியை ரத்து செய்துவிட்டு தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த விசாரணை முடிவடைந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் துளசி முனிராஜ் கவுடாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து துளசி முனி முனிராஜ் கவுடா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடைபெற்று வந்தது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பு 13-ந் தேதிக்கு (அதாவது நேற்று) ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த துளசி முனிராஜ் கவுடாவின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதன் மூலம் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் திட்டமிட்டபடி வருகிற நவம்பர் 3-ந் தேதி நடைபெறும் என்பது உறுதியாகி உள்ளது.

அந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட துளசி முனிராஜ் கவுடா மற்றும் முனிரத்னா ஆகியோர் டிக்கெட் கேட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story