கிராம நிர்வாக அலுவலகங்களில் மனு கொடுத்து பா.ம.க.வினர் போராட்டம்


கிராம நிர்வாக அலுவலகங்களில் மனு கொடுத்து பா.ம.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2020 3:13 AM GMT (Updated: 15 Dec 2020 3:13 AM GMT)

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் மனு கொடுத்து பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் முதுநகர், 

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்ககோரி தமிழகம் முழுவதும் பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் 14-ந் தேதி (அதாவது நேற்று) மாநிலம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் மனு கொடுத்து போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை மாநில செயற்குழு உறுப்பினர் போஸ் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் கோபிநாத் ஆகியோர் தலைமையில் மாநில துணைத் தலைவர் சண்முகம், வக்கீல் தமிழரசன், நகர செயலாளர்கள் ஆனந்த், வீர பால்ராஜ் ஆகியோர் முன்னிலையில் பா.ம.க.வினர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமனிடம் மனு கொடுத்தனர்.

பின்னர் அவர்கள் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தேவனாம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலகத்திலும் பா.ம.க.வினர் மனு கொடுத்தனர். இதில் பசுமைத்தாயகம் அசோக்குமார், மாநில இளைஞரணி துணை செயலாளர் விஜயவர்மன், மாவட்ட துணை செயலாளர் திலீப் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

முதுநகர்

இதேபோல் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் மாநில இளைஞரணி துணை செயலாளர் சந்திரசேகர், பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் விஸ்வநாதன், கஜேந்திரன் உள்ளிட்டோர் ஊர்வலமாக சென்று கடலூர் முதுநகர் அருகே உள்ள குடிகாடு கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுத்தனர்.

பா.ம.க. முன்னாள் இளைஞர் சங்க செயலாளர் வாட்டர் மணி தலைமையில் ஒன்றிய செயலாளர் சுதாகர், மாவட்ட விவசாய சங்க சீனு, மாவட்ட ஊடக பேரவை பாலாஜி உள்ளிட்டோர் மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன், மாநில வன்னியர் சங்க துணை செயலாளர் காசிலிங்கம் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக சென்று தொண்டமாநத்தம் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

605 அலுவலகங்கள்

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், கடலூர், விருத்தாசலம் ஆகிய இடங்களில் உள்ள மொத்தம் 605 கிராம நிர்வாக அலுவலகங்களில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பா.ம.க. கவிஞர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story