டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் தொடர் காத்திருப்பு போராட்டம்


டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் தொடர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2020 4:11 AM GMT (Updated: 15 Dec 2020 4:11 AM GMT)

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாகையில் அனைத்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம், 

ெடல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாகை அவுரி திடலில் அனைத்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம், மாவட்ட தலைவர் அம்பிகாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.

வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்திட வேண்டும். விவசாயத்தை அன்னிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்க கூடாது. டெல்லியில் வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராடும் விவசாயிகளை வஞ்சிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் எம்.எல்.ஏ. மதிவாணன், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நாகை மாலி, மாரிமுத்து, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் சரபோஜி, மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணி மாநில பொருளாளர் இப்ராஹிம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பரிமளசெல்வன் உள்பட 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story