திருப்பூர் மாவட்டம் வஞ்சிபாளையம் அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலைமறியல்


டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.
x
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 24 Dec 2020 10:08 PM GMT (Updated: 24 Dec 2020 10:08 PM GMT)

வஞ்சிபாளையம் அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வஞ்சிபாளையம் அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

புதிய டாஸ்மாக்
திருப்பூர் மாவட்டம் வஞ்சிபாளையத்தில் இருந்து அவினாசி செல்லும் சாலையில் வெங்கமேடு பகுதியில் நேற்று முன்தினம் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதையும் மீறி கடை திறக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நேற்று சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர்.

பின்னர் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

பாதுகாப்பற்ற நிலை
புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடைக்கு மது குடிப்பதற்காக வரும் நபர்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருவதுடன், பெண்களை கேலி செய்து ஆபாசமாக பேசுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த கடையின் அருகே தற்போது மேலும் ஒரு கடை திறக்கப்பட்டால் இப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும்.

எனவே புதிதாக திறக்கப்பட்ட இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா
இதையடுத்து டாஸ்மாக் துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று கூறி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசப்படுத்தினார்கள். இதன் பின்னரே பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் சிலர் கைக்குழந்தையுடன் டாஸ்மாக் கடை வாசல் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Next Story