மராட்டியத்தில் ஒரே மாதத்தில் 3-வது முறையாக தொழில் அதிபர்களுடன் முதல்-மந்திரி ஆலோசனை


மராட்டியத்தில் ஒரே மாதத்தில் 3-வது முறையாக தொழில் அதிபர்களுடன் முதல்-மந்திரி ஆலோசனை
x
தினத்தந்தி 29 April 2021 12:22 AM GMT (Updated: 29 April 2021 12:22 AM GMT)

ஒரே மாதத்தில் 3-வது முறையாக தொழில் அதிபர்களை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே காணொலி காட்சி மூலமாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

3-வது முறை சந்திப்பு
மராட்டியத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. நோய் பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இதையடுத்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பல்வேறு 
துறையை சார்ந்தவர்களையும் காணொலி காட்சி மூலம் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்த வகையில் ஒரே மாதத்தில் 3-வது முறையாக நேற்று தொழில் அதிபர்களுடன் முதல்-மந்திரி காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.

தொழில்துறையை பாதுகாக்க...
இந்த கூட்டத்தில், “மூன்றாம் கட்ட தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதற்காக மாநில அரசு மேற்கொண்டு இருக்கும் முயற்சிகள் மற்றும் கொரோனா 3-வது அலையில் இருந்து குடிமக்களையும், 
தொழில் துறையையும் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது” என முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளது.

இந்தநிலையில் மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா இந்த கூட்டம் பயனுள்ள நேரமாக அமைந்ததாக கூறி பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த கூட்டத்தால் நேரம் வீணடிக்கப்படவில்லை. இதில் பயனுள்ள தொழில்துறை முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது” என்றார்.

Next Story