தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் பதவியேற்பு
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் இன்று பதவியேற்று கொண்டார்.
புதுடெல்லி,
தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2010ம் ஆண்டு அக்டோபரில் உருவாக்கப்பட்டது. அதன் முதல் தலைவராக நீதிபதி லோகேஷ்வர் சிங் பன்டா பதவியேற்று கொண்டார். அவரை தொடர்ந்து நீதிபதி ஸ்வதேந்தர் குமார் பதவி ஏற்று 5 ஆண்டுகள் நிறைவு செய்து கடந்த வருடம் டிசம்பர் 20ந்தேதி ஓய்வு பெற்றார்.
அவரது ஓய்வுக்கு பின்னர் நீதிபதி உமேஷ் தத்தாத்ரேயா சால்வி பொறுப்பு தலைவரானார். அவர் பிப்ரவரி 13ந்தேதி ஓய்வு பெற்றார். அவரை தொடர்ந்து நீதிபதி ஜாவத் ரஹீம் பொறுப்பு தலைவர் ஆனார்.
டெல்லியின் முதன்மை அமர்வில் ஒரே ஒரு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதில் நீதிபதி ரஹீம், நீதிபதிகள் ரத்தோர் மற்றும் கார்பையால் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் இன்று பதவியேற்று கொண்டார். இவர் கடந்த 2014ம் ஆண்டு ஜூலையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டவர்.
சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் வன பாதுகாப்பு மற்றும் பிற இயற்கை வளங்கள் தொடர்புடைய வழக்குகள் இங்கு விசாரிக்கப்பட்டு வருகின்றன.