மாநிலங்களவையில் ‘முத்தலாக்’ மசோதா தாக்கல் செய்யப்படாது, அடுத்த பாராளுமன்ற தொடருக்கு ஒத்திவைப்பு


மாநிலங்களவையில் ‘முத்தலாக்’ மசோதா தாக்கல் செய்யப்படாது, அடுத்த பாராளுமன்ற தொடருக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 10 Aug 2018 10:07 AM GMT (Updated: 10 Aug 2018 10:07 AM GMT)

‘முத்தலாக்’ மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. #TripleTalaq

புதுடெல்லி, 
 
முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம்’, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறி விட்டது. மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. முஸ்லிம் ஆண்களுக்கு விரோதமான அம்சங்கள் இருப்பதாக கூறி, அந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே, அவர்களின் கோரிக்கையை ஏற்றும், முஸ்லிம் ஆண்களின் அச்சத்தை போக்கும்வகையிலும், அந்த மசோதாவில் 3 திருத்தங்கள் செய்ய மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இதுபற்றி மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:– ‘முத்தலாக்’ விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்ட ஆணுக்கு ஜாமீன் கிடையாது என்று முன்பு இருந்தது. தற்போது, மனைவியின் கருத்தை கேட்ட பிறகு, ஜாமீன் வழங்க மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. மனைவிக்கு இழப்பீடு வழங்க கணவர் சம்மதித்த பிறகு, மாஜிஸ்திரேட்டு ஜாமீன் வழங்கலாம். ‘முத்தலாக்’ விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ஆண் மீது, பக்கத்து வீட்டுக்காரர் கூட புகார் கொடுக்க முடியும் என்று முன்பு இருந்தது. 

இனிமேல், பாதிக்கப்பட்ட மனைவியோ, அவருடைய ரத்த சம்பந்த உறவினர்களோ கொடுக்கும் புகார்கள் மீது மட்டுமே வழக்கு பதியப்படும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கணவன்–மனைவி இடையே சமரசம் செய்து வைக்க மாஜிஸ்திரேட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்று மூன்றாவது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில், ‘முத்தலாக்’ முறை சட்ட விரோதமானதாக நீடிக்கும். இந்த திருத்தங்களுடன், முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. திருத்தங்கள் செய்யப்பட்டு இருப்பதால், மசோதாவை எதிர்க்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

இப்போது மழைக்கால கூட்டத்தொடர் முடியும் நிலையில் மசோதாவை அரசு தாக்கல் செய்யாது எனவும் அடுத்த கூட்டத்தொடருக்கு ஒத்திவைத்துள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Next Story