சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி: சத்தீஷ்கார் முதல்-மந்திரியாக பூபேஷ் பாகேல் தேர்வு - இன்று மாலை பதவி ஏற்கிறார்


சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி: சத்தீஷ்கார் முதல்-மந்திரியாக பூபேஷ் பாகேல் தேர்வு - இன்று மாலை பதவி ஏற்கிறார்
x
தினத்தந்தி 16 Dec 2018 11:00 PM GMT (Updated: 16 Dec 2018 8:07 PM GMT)

சத்தீஷ்கார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில் அங்கு புதிய முதல்-மந்திரியாக பூபேஷ் பாகேல் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் இன்று (திங்கட்கிழமை) மாலையில் பதவி ஏற்கிறார்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 90 இடங்களில் 68 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி சாதனை படைத்தது. இதன் மூலம் தொடர்ந்து 15 ஆண்டுகளாக பா.ஜனதா வசம் இருந்த சத்தீஷ்காரில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை அந்த கட்சி பெற்றது.

பின்னர் அங்கு முதல்-மந்திரி பதவிக்கு மூத்த தலைவர்களான பூபேஷ் பாகேல், சிங் தியோ, டாம்ரத்வாஜ் சாகு, சரண் தாஸ் மகத் ஆகிய 4 பேருக்கு இடையே போட்டி நிலவியது. இதனால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் கட்சித்தலைமைக்கு குழப்பம் ஏற்பட்டது.

எனவே இந்த 4 பேருடனும் கட்சித்தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். சில நாட்களாக நீடித்த இழுபறிக்குப்பின் பூபேஷ் பாகேலை முதல்-மந்திரியாக நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், டர்க் மாவட்டத்தின் படான் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார்.

முதல்-மந்திரியாக பூபேஷ் பாகேல் தேர்வான தகவல் சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் நேற்று நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. எனவே அவர்கள் அனைவரும், பூபேஷ் பாகேலை காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவராக (முதல்-மந்திரி) ஒருமனதாக தேர்வு செய்தனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் மல்லிகார்ஜுன கார்கேவும் கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, ‘சத்தீஷ்காரில் முதல்-மந்திரி போட்டியில் இருந்த 4 பேரும் கட்சிக்காக சமமாக உழைத்து இருக்கின்றனர். எனவே பூபேஷ் பாகேலை தேர்வு செய்வது கடினமான முடிவு ஆகும். 15 ஆண்டுகளுக்குப்பின் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்திருப்பதால், எங்களுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. நாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பூபேஷ் பாகேல் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பூபேஷ் பாகேல், இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு பதவி ஏற்றுக்கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருடன் வேறு மந்திரிகள் யாரும் இன்று பதவி ஏற்கமாட்டார்கள் எனவும் கூறப்படுகிறது.

பூபேஷ் பாகேல் தேர்வு மூலம் சத்தீஷ்கார் முதல்-மந்திரி தேர்வில் சில நாட்களாக நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.


Next Story