கார்கில் வெற்றி தினம் கொண்டாட்டம்: இந்திய ராணுவத்துக்கு நாடாளுமன்றம் புகழாரம்


கார்கில் வெற்றி தினம் கொண்டாட்டம்: இந்திய ராணுவத்துக்கு நாடாளுமன்றம் புகழாரம்
x
தினத்தந்தி 26 July 2019 9:30 PM GMT (Updated: 26 July 2019 8:47 PM GMT)

கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி, இந்திய ராணுவத்துக்கு நாடாளுமன்றம் புகழாரம் சூட்டியது.

புதுடெல்லி,

கடந்த 1999-ம் ஆண்டு கார்கில் பனிமலை சிகரத்தில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினரும், அவர்களுடைய கூட்டாளிகளும் இந்திய ராணுவத்தால் விரட்டி அடிக்கப்பட்டனர். அதன் 20-வது வெற்றி தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று இந்திய ராணுவத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

மக்களவை கூடியவுடன், சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது:-

கார்கில் வெற்றி தினம், இந்திய வரலாற்றில் முக்கியமான நாள். அண்டை நாட்டு ராணுவ வீரர்களையும், ஊடுருவல் காரர்களையும் நமது மண்ணில் இருந்து விரட்டி அடித்த நமது படைகளுக்கும், துணிச்சலான நமது வீரர்களுக்கும் இந்த சபையின் சார்பில் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். கார்கில் போர் வெற்றிக்காக, நமது நாடு பாராட்டுக்குரியது. தாயகத்துக்காக உயிர் துறந்த வீரர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “கார்கில் போர் மற்றும் நாட்டு பாதுகாப்பின் முக்கியத்துவம் கருதி, இதுபற்றி விரிவான விவாதம் நடத்தப்படவேண்டும்” என்று கூறினார்.

பின்னர், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

கார்கில் வெற்றி தினத்தையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. நமது வீரர்கள் காட்டிய துணிச்சலும், தியாகமும் மறக்க முடியாதவை.

பாகிஸ்தான் நம்முடன் 1965, 1971, 1999 ஆகிய ஆண்டுகளில் போரிட்டு தோல்வி அடைந்தது. அதனால், இந்தியாவுடன் குறைந்த அளவிலான போரோ, முழு அளவிலான போரோ நடத்த பாகிஸ்தான் தகுதியற்றது. ஆனால், மறைமுக போர் நடத்த முடியும். அதைத்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் நடத்தி வருகிறது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

இதுபோல், நாடாளுமன்ற மாநிலங்களவை நேற்று கூடியவுடன், கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக சபைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். அதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Next Story