சுப்ரீம் கோர்ட்டில் மதுரை தீண்டாமை சுவர் வழக்கு முடித்துவைப்பு


சுப்ரீம் கோர்ட்டில் மதுரை தீண்டாமை சுவர் வழக்கு முடித்துவைப்பு
x
தினத்தந்தி 30 Aug 2019 9:30 PM GMT (Updated: 30 Aug 2019 8:29 PM GMT)

மதுரை தீண்டாமை சுவர் விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் முடித்துவைக்கப்பட்டது.

புதுடெல்லி,

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த சந்தையூரில் உள்ள ராஜகாளியம்மன் கோவிலை சுற்றி ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களால் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இதனால் இரு சமூகத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்டது. மதுரை மாவட்ட நிர்வாகம் இரு சமூக மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது. சுவரின் ஒரு பகுதியை இடிக்க உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சுவரை இடிக்க உத்தரவிட்டது. மாவட்ட நிர்வாகம் அதனை தீண்டாமை சுவர் என அறிவித்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் போலீஸ் பாதுகாப்புடன் சுவரை இடித்தது.

தீண்டாமை சுவர் என மாவட்ட நிர்வாகம் அறிவித்ததை எதிர்த்து எம்.கருப்பையா என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக எம்.கருப்பையா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை கடந்த ஆண்டு ஆகஸ்டு 28-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, மதுரை மாவட்ட கலெக்டர் எஸ்.நடராஜன் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது, மாவட்ட கலெக்டருடன் அனைத்துதரப்பினரும் அமர்ந்து பேசி இந்த விவகாரத்தில் முடிவை எட்டுங்கள். இல்லையேல் சுவர் முழுவதையும் இடிக்க வேண்டும் என்ற ஐகோர்ட்டு மதுரை கிளையின் உத்தரவை உறுதிப்படுத்த நேரிடும். பேச்சுவார்த்தை முடிவு பற்றி ஒரு வாரத்தில் கோர்ட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எம்.சந்தனகவுடர், சஞ்சீவ்கன்னா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.நெடுமாறன், தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெயந்த் முத்துராஜா ஆகியோர் ஆஜரானார்கள்.

விசாரணை தொடங்கியதும் கலெக்டர் தலைமையில் இருதரப்பிலும் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டியதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை முடித்துவைப்பதாக நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.


Next Story