டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ப.சிதம்பரம் அனுமதி


டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ப.சிதம்பரம் அனுமதி
x
தினத்தந்தி 28 Oct 2019 1:47 PM GMT (Updated: 28 Oct 2019 1:47 PM GMT)

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் உடல்நல குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21-ந் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் கடந்த 21ந்தேதி ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே, இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு கடந்த 16-ந்தேதி கைது செய்தது.  தொடர்ந்து அவரது காவலை நீட்டிக்க கோரி கடந்த 24ந்தேதி அமலாக்க பிரிவு சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் முறையீடு செய்தது.  

இதன்படி, ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை காவலை வருகிற 30-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி அஜய்குமார் குஹர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில், உடல்நல குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் இன்று அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை சீரான நிலையில், மருத்துவமனையில் இருந்து மீண்டும் அமலாக்க துறை காவலுக்கு கொண்டு செல்லப்படுகிறார்.

Next Story