ஐதராபாத்தில் என்கவுண்ட்டர் மூலம் 4 பேர் சுட்டுக்கொலை: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு


ஐதராபாத்தில் என்கவுண்ட்டர் மூலம் 4 பேர் சுட்டுக்கொலை: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Dec 2019 10:15 PM GMT (Updated: 11 Dec 2019 9:26 PM GMT)

ஐதராபாத் புறநகர் பகுதியில் போலீஸ் ‘என்கவுண்ட்டர்’ மூலம் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று அறிவித்தது.

புதுடெல்லி,

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் புறநகர் பகுதியில் பெண் டாக்டரை கற்பழித்து கொன்று, உடலை தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் கடந்த 6-ந்தேதி போலீசாரால் ‘என்கவுண்ட்டர்’ மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் ஜி.எஸ்.மணி, பிரதீப் குமார் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் இந்த என்கவுண்ட்டர் தொடர்பாக ஐதராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் உள்ளிட்ட போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடவேண்டும் என்றும் இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழு அல்லது வெளிமாநில சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களில் ஒருவரான ஜி.எஸ்.மணி ஆஜரானார்.

அப்போது தலைமை நீதிபதி, 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்தும் என்றும், இந்த குழுவை வியாழக்கிழமை (இன்று) சுப்ரீம் கோர்ட்டு அமைக்கும் என்றும் கூறினார். இந்த குழுவின் விசாரணை டெல்லியில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

அப்போது கோர்ட்டில் ஆஜராகி இருந்த மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, தெலுங்கானா மாநிலம் சார்பாக தான் ஆஜராகப் போவதாகவும், இந்த மனுவின் மீது வாதங்கள் நடைபெற்ற பிறகு உத்தரவு பிறப்பிப்பது சரியாக இருக்கும் என்றும் கூறினார்.

அதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, தெலுங்கானா ஐகோர்ட்டு இது குறித்து விசாரித்து வருவது தங்கள் கவனத்தில் உள்ளதாகவும், அந்த விசாரணையும் தொடர்ந்து நடக்கட்டும் என்றும், ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Next Story