உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 2,000 வாகனங்களுக்கு அபராதம்


உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 2,000 வாகனங்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 24 March 2020 10:45 PM GMT (Updated: 24 March 2020 9:44 PM GMT)

உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய 2 ஆயிரம் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவிலும் தனது கோர முகத்தை கொரோனா தொற்று காட்ட தொடங்கியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகம் உள்ளிட்ட 30 மாநிலங்களில் 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் பொதுமக்கள் சிலர் ஊரடங்கு உத்தரவையும், கொரோனா எச்சரிக்கையையும் முழுமையாக கடைபிடிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மிக முக்கியமான சில அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில், ’ஊரடங்கு உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசாங்கம் பிறப்பிக்கக்கூடிய உத்தரவுகளையும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்றும், இதனை மீறக்கூடிய பொதுமக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஊரடங்கு உத்தரவை மீறியதால் நேற்று 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சுமார் 2 ஆயிரம் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த உத்தரவை பின்பற்றாமல் தெருவில் சுற்றிய வாலிபர்களுக்கு தோப்புக்கரணம், முட்டி போடுதல் போன்ற நூதன தண்டனையும் வழங்கப்பட்டது.

மேற்கு வங்காள மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டினர். ரிக்‌ஷா, இருசக்கர வாகன ஓட்டிகளின் டயர்களில் காற்றை பிடுங்கி எச்சரித்து அனுப்பினர்.


Next Story