கும்பமேளாவுக்கு சென்று வந்தவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை; டெல்லி, ஒடிசா, குஜராத் அரசுகள் உத்தரவு


கும்பமேளாவுக்கு சென்று வந்தவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை; டெல்லி, ஒடிசா, குஜராத் அரசுகள் உத்தரவு
x
தினத்தந்தி 18 April 2021 2:11 PM GMT (Updated: 18 April 2021 2:11 PM GMT)

கும்பமேளா திருவிழாவுக்கு சென்று வருபவர்களுக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று டெல்லி, ஒடிசா, குஜராத் அரசுகள் அறிவித்துள்ளன.

கொரோனா அதிகரிப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறும். இந்த ஆண்டு கும்பமேளா திருவிழாவை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 30 நாட்கள் மட்டும் நடத்திக்கொள்ள அகாதாக்கள் முடிவு செய்தனர். ஆனால், இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதை பொருட்படுத்தாமல் ஹரித்வார் கும்பமேளாவில் கடந்த வாரத்தில் 43 லட்சம் பக்தர்கள் வந்து புனித நீராடியதாக, மாநில அரசு தெரிவித்தது.

பெரும்பாலானோர் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்காமலும், முககவசம் அணியாமலும், சமூக விலகலை கடைப்பிடிக்காமலும் புனித நீராடினர். கும்பமேளாவுக்கு வந்தவர்களிடையே நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் முதல் கட்டமாக 2 ஆயிரத்து 171 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மத்திய பிரதேச மகா நிர்வானி அகாராவின் தலைவர் கபில் தேவ் கடந்த 13-ந் தேதி உயிரிழந்தார்.

14 நாட்கள் தனிமை

இதையடுத்து, 13 அகாதாக்களின் அமைப்பான நிரஞ்சனி அகாதா, நேற்று முன்தினத்துடன் கும்பமேளாவை முடித்துக்கொள்வதாக திடீரென அறிவித்தது. அதுமட்டுமல்லாமல் கும்பமேளாவுக்கு வந்த சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று ஹரித்வார் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். மேலும் பல சாதுக்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால், அவர்களை தனிமைப்படுத்தி இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கும்பமேளா திருவிழா கொரோனா வைரஸ் பரப்பும் முக்கிய மையாக இருப்பதால், அங்கு சென்று விட்டு வருவோர் அனைவரும் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் ஒடிசா, டெல்லி, குஜராத் அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

கொரோனா பரிசோதனை

இது குறித்து டெல்லி தலைமை செயலாளர் விஜய் தேவ் விடுத்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

டெல்லியை சேர்ந்த மக்கள் யாரெல்லாம் கும்பமேளா திருவிழாவுக்கு சென்று வந்தார்களோ அவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கும்பமேளாவுக்கு சென்று வரும் மக்களுக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

கடந்த 4-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை கும்பமேளாவுக்கு சென்று திரும்பிய டெல்லி மக்கள், தங்கள் விவரங்களை அடுத்த 24 மணிநேரத்துக்குள் டெல்லி அரசின் கொரோனா கட்டுப்பாட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கண்காணிக்க வேண்டும்

அதேபோல வரும் 30-ந் தேதி வரை கும்பமேளாவுக்கு செல்பவர்களும் தங்கள் விவரங்களை டெல்லியை விட்டு செல்லும் முன்பாக தனியாக குறிப்பிட வேண்டும். கும்பமேளாவுக்கு சென்று வந்தவர்களை தீவிரமாக கண்காணிக்க இது அரசுக்கு உதவும்.

இந்த விதிமுறைகளை மீறி கும்பமேளாவுக்கு சென்றுவிட்டு வந்தவர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும், அரசின் கொரோனா கட்டுப்பாட்டு மையத்துக்கும் 2 வாரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளார்.

ஒடிசா அரசு

இதேபோல் ஒடிசா மாநில அரசு பிறப்பித்த உத்தரவில், “ஒடிசா மக்கள் கும்பமேளாவுக்கு செல்லும் முன் தங்கள் விவரங்களை அந்தந்த மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். கும்பமேளாவுக்கு சென்று வந்தவர்கள் தங்களை 14 நாட்கள் கண்டிப்பாக வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அவ்வாறு சென்று வந்தவர்களுக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்யப்படும், அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி, “கும்பமேளாவில் கலந்து கொண்டு விட்டு திரும்புபவர்கள் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.


Next Story