ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு- சிறப்பு போலீஸ் அதிகாரி, மனைவி உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு போலீஸ் அதிகாரியின் இல்லத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் உள்ள அவந்திப்போரா பகுதியில் சிறப்பு போலீஸ் அதிகாரியான பயஸ் அகமது என்பவர் தனது மனைவி ராஜ பேகம் மற்றும் மகள் ராஃபியாவுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் சிறப்பு போலீஸ் அதிகாரியின் இல்லத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக குடும்பத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் சிறப்பு போலீஸ் அதிகாரி பயஸ் அகமது மற்றும் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மகள் ராஃபியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, குறிப்பிட்ட பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகள் எங்காவது பதுங்கியுள்ளார்களா? என தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய அதேநாளில் சிறப்பு போலீஸ் அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story