டெல்லியில் மம்தா பானர்ஜி - சுப்பிரமணியன் சுவாமி திடீர் சந்திப்பு..!


டெல்லியில் மம்தா பானர்ஜி - சுப்பிரமணியன் சுவாமி திடீர் சந்திப்பு..!
x
தினத்தந்தி 24 Nov 2021 9:37 AM GMT (Updated: 24 Nov 2021 9:37 AM GMT)

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியை பா.ஜ.கவின் சுப்பிரமணியன் சுவாமி சந்தித்து பேச உள்ளார்.

புதுடெல்லி,

மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி  4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவரை பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று  சந்திக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

பா.ஜ.கவின் தேசிய செயற்குழுவில் இருந்து  கடந்த மாதம்  சுப்பிரமணியன் சுவாமி நீக்கப்பட்ட நிலையில், அவர் மம்தாவை பல்வேறு தருணங்களில் பாராட்டி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்கள் இருவரின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில்  கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னதாக, சுப்பிரமணியன் சுவாமி கடந்த  அக்டோபர் மாதம் இத்தாலியின் ரோம் நகரத்தில்  நடைபெற்ற உலகளாவிய அமைதி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு, மம்தா பானர்ஜிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததை கண்டித்து,  கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும்,  அவர் நேற்று கொல்கத்தாவில் மேற்கு வங்காள ஆளுநர் ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசியிருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் இல்லத்தில் இன்று மாலை இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

டெல்லி சென்றுள்ள மம்தா பானர்ஜி இன்று மாலை பிரதமர் மோடியை  சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார். முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் கீர்த்தி ஆசாத் மற்றும் அசோக் தன்வார் உள்ளிட்டோர் நேற்று மம்தா பானர்ஜியின் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story