கொரோனா மாத்திரை தீங்குகள் அதிகம்; இந்தியாவில் அனுமதி மறுப்பு


கொரோனா மாத்திரை தீங்குகள் அதிகம்; இந்தியாவில் அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 12 Jan 2022 10:31 PM GMT (Updated: 12 Jan 2022 10:31 PM GMT)

கொரோனா மாத்திரையின் தீங்குகள் அதிகம் என கூறி இந்தியாவில் அதனை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.



புதுடெல்லி,

கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அமெரிக்காவின் மெர்க் நிறுவனம் மோல்னுபிராவிர் என்ற மாத்திரையை உருவாக்கி உள்ளது.

இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூ.35 ஆகும்.  கொரோனா நோயாளிக்கு 5 நாட்கள் சிகிச்சைக்காக 40 கேப்சூல்களின் மொத்த விலை ரூ.1,400 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

எனினும், இந்தியாவில் இதனை விற்பனை செய்வதற்கு அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை.  அமெரிக்காவில் கொரோனா தொற்று நோயை குணப்படுத்த, மோல்னுபிராவிர் பயன்பாட்டுக்கு அங்குள்ள எப்.டி.ஏ. என்னும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இங்கிலாந்திலும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியாவில் இந்த மாத்திரையின் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்து, அதை கொரோனா சிகிச்சையின் அங்கமாக சேர்ப்பதற்கு கொரோனா தொடர்பான தேசிய பணிக்குழுவின் நிபுணர்கள் தொடர்ந்து 4-வது முறையாக மறுத்து விட்டனர்.

இந்த மாத்திரையினால் அறியப்படுகிற நன்மைகளை விட தீங்குகள் அதிகம் இருப்பதாக கூறி இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா கூறும்போது, நாங்கள் இந்த மாத்திரை பற்றி விரிவாக ஆலோசித்தோம். இதில் இறுதி முடிவு, மோல்னுபிராவிர் மாத்திரையின் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ஆபத்துகள் இருக்கின்றன என்பதாகும். தவிரவும் இந்த மாத்திரைக்கு நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் எனவும் கூறினார்.

இதுபற்றி, நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் பணிக்குழு தலைவரான மருத்துவர் என்.கே. அரோரா கூறும்போது, மோல்னுபிராவிர் மருந்துகள் மூத்த குடிமகன்களுக்கு குறிப்பிடும்படியாக இணை நோய்கள் கொண்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.  இந்த மருந்துகளை பருவ வயதினருக்கு கொடுக்க கூடாது என்று கூறியுள்ளார்.

வரும் நாட்களில் கொரோனா எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கும் என ஐ.ஐ.டி. மாதிரிகள் தெரிவிக்கின்றன.  உண்மையில் அது நடந்து வருகிறது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்த முறையான அணுகுமுறை மற்றும் தடுப்பூசி செலுத்துதல் ஆகிய இரண்டும் முக்கிய காரணிகளாக உள்ளன என அவர் கூறியுள்ளார்.  ஊரடங்கு போன்ற நிர்வாக நடவடிக்கைகளும் இதற்கு உதவும் என்று அவர் கூறினார்.


Next Story