மேற்கு வங்காளம்: விரைவு ரெயில் கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு


மேற்கு வங்காளம்: விரைவு ரெயில் கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
x
தினத்தந்தி 14 Jan 2022 1:47 AM GMT (Updated: 14 Jan 2022 6:29 AM GMT)

மேற்கு வங்காளத்தில் கவுகாத்தி- பிகேனிர் விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

கொல்கத்தா,

ராஜஸ்தானிலிருந்து அசாம் நோக்கிச் சென்ற கவுகாத்தி- பிகேனிர் விரைவு ரெயில் மேற்கு வங்க மாநிலத்தின் தோமாஹானி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரெயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. 

அதிகாரிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  ரெயில் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்றது.

இந்த விபத்தில் 4 பேர் பலியானதாகவும்  20 -க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது. மேலும் காயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பிரதமர் மோடியுடன் பேசி, மீட்புப் பணிகள் குறித்த நிலைமையை விவரித்துள்ளதாகவும் விரைவான மீட்புப் பணிகளுக்கான நிலைமையை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது. மேலும்  சிகிச்சை பெறுவோருக்கு ரூ.1 லட்சம் மற்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என கூறியுள்ளது. 

இந்த நிலையில் தற்போது இந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 36 க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் கவுகாத்தி செல்வதற்கு சிறப்பு ரெயில் ஒழுங்கு  செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஜான் பர்லா தெரிவித்துள்ளார்.

Next Story