மூன்றாவது அலையில் இறந்தவர்களில் 60 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்: ஆய்வுத்தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 Jan 2022 12:11 AM GMT (Updated: 23 Jan 2022 12:11 AM GMT)

கொரோனா மூன்றாவது அலையில் 60 சதவீத இறப்புகள், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்ற ஒரு ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி, 

நாடு கொரோனா தொற்றின் 3-வது அலையை எதிர்த்து போராடி வருகிறது. இந்த அலையில் ஆஸ்பத்திரி சேர்க்கைகள், இறப்புகள் குறைவாகவே இருக்கின்றன. இந்த அலை தொடர்பாக டெல்லி மேக்ஸ் ஹெல்த்கேர் ஆஸ்பத்திரி ஒரு ஆய்வு நடத்தியது. கடந்த 20-ந்தேதி வரையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

* கொரோனா மூன்றாவது அலையில் நிகழ்ந்துள்ள இறப்புகளில் 60 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும், இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளாதவர்களும்தான்.

* இறந்தவர்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறுநீரக நோய்கள், இதய நோய்கள், நீரிழிவு, புற்றுநோய் உள்ளிட்ட இணை நோயுடன் போராடி வந்தவர்கள் ஆவார்கள்.

சிறுவர், சிறுமியர் இறப்பு இல்லை...

* எங்கள் ஆஸ்பத்திரியில் 82 பேர் இறந்துள்ளனர். 60 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள் அல்லது முழுமையாக போடாதவர்கள் ஆவார்கள்.

* 41 சிறுவர், சிறுமியர் ஆஸ்பத்திரியில் கொரோனா மீட்பு சிகிச்சைக்கு சேர்ந்தனனர். இந்த பிரிவில் இறப்பு இல்லை. 7 பேர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவிலும், 2 பேர் வென்டிலேட்டர் வசதியுடனும் சிகிச்சை பெற்றனர்.

* முதல் அலையில் இறப்பு விகிதம் 7.2 சதவீதம், இரண்டாவது அலையில் 10.5 சதவீதம். மூன்றாவது அலையில் 6 சதவீதம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மந்திரி தகவல்

கொரோனாவின் மூன்றாவது அலையில் இறப்புகள், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கும், இணைநோய்களுடன் போராடியவர்களுக்கும் நேர்ந்து இருப்பதை டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயினும் ஏற்கனவே குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.


Next Story