உ.பி.யை அதிரவைத்த சம்பவம்: வழக்கறிஞர் கொலையில் தொடர்புடைய 6 பேர் சுட்டுக்கொலை...! - பின்னணி என்ன?


உ.பி.யை அதிரவைத்த சம்பவம்: வழக்கறிஞர் கொலையில் தொடர்புடைய 6 பேர் சுட்டுக்கொலை...! - பின்னணி என்ன?
x

முன்னாள் எம்.பி.யும் அவரது சகோதரரும் போலீசார் கண்முன்னே நேரலையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.பி. ஆதிக் அகமது. ரவுடியாக வாழ்க்கையை தொடங்கிய ஆதிக் அகமது பின்னர் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானார். இவர் 2004 முதல் 2009 வரை எம்.பி.யாக இருந்தார்.

இதனிடையே, கொலை உள்பட 100-க்கும் மேற்பட்ட குற்றவழக்குகளில் ஆதிக் அகமது மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதனால் அவர் சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அந்த வகையில் கடந்த 2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. ராஜூ பால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஆதிக் அகமது முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அலகாபாத் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு ராஜூ எம்.எல்.ஏ.வாக தேர்வானார். இந்த தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.பி. ஆதிக் அகமதுவின் சகோதரன் கலித் அகமது தோல்வியடைந்தார். இதனால் தோல்விக்கு பழி தீர்க்க ராஜூ பாலை ஆதிக் அகமது கொலை செய்ததாக தகவல் வெளியானது.

இந்த கொலை வழக்கில் வழக்கறிஞர் உமேஷ் பால் முக்கிய சாட்சியாக இருந்தார். ஆனால், உமேஷ் பாலை 2006-ம் ஆண்டு ஆதிக் அகமது கடத்தி சென்று மிரட்டியுள்ளார். இது குறித்து உமேஷ் பால் அளித்த புகாரின் அடிப்படையில் ஆதிக் அகமது அவரது சகோதரர் அர்ஷப் அகமது உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு ஒருபுறமிருக்க மற்றொரு வழக்கில் ஆதிக் அகமது அவரது சகோதரர் அர்ஷப் அகமது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

2006-ம் ஆண்டு வழக்கறிஞர் உமேஷ் பால் கடத்தல் வழக்கில் ஆதிக் அகமது, அவரது சகோதரர் அர்ஷப் அகமது குற்றவாளிகள் என கடந்த மாதம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஆதிக் அகமதுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதனிடையே, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உமேஷ் பால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பாதுகாவலர்களுடன் காரில் வந்த உமேஷை இடைமறித்த ஆதிக் அகமதுவின் கும்பல் உமேஷை குண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கொன்றனர். இதை தடுக்க முயன்ற உமேஷ் பாலின் பாதுகாவலரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த கொலையில் ஆதிக் அகமது அவரது சகோதரர் அர்ஷப் அகமது மற்றும் அசாத், அர்பாஸ், விஜய் சவுதிரி என்ற உஸ்மான், குலாம் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆதிக் அகமதுவின் மனைவி ஷையிஸ்டா பர்வீன் மற்றும் துபாக்கிச்சூடு நடத்தியவர்களில் மேலும் 3 பேரான ஹுடு முஸ்லிம், சபீர், அர்மென் தலைமறைவாகினர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகாரமானது. வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேர் அடுத்தடுத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

உமேஷ் பால் கொலையாளிகள் வந்த காரை ஓட்டி வந்த அர்பாஸ் என்பரை கடந்த பிப்ரவரி 27-ம் தேதி போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

இதனை தொடர்ந்து உமேஷ் பால் கொலையாளிகளில் ஒருவனான விஜய் சவுதிரி என்ற உஸ்மானை பிரயாக்ராஜ் நகரில் வைத்து கடந்த மார்ச் 6-ம் தேதி போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

ஜான்சி நகரில் கடந்த 13-ம் தேதி நடந்த என்கவுண்டரில் உமேஷ் பால் கொலை வழக்கில் தொடர்புடைய ஆதிக் அகமதுவின் மகன் அசாத் அகமது மற்றும் குலாம் ஆகிய 2 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் எம்.பி.யும், ரவுடியுமான ஆதிக் அகமது அவரது சகோதரர் அர்ஷப் அகமது நேற்று போலீசார் கண்முன்னே சுட்டுக்கொல்லப்பட்டனர்.

செய்தியாளர்கள் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தபோது போலீசார் சுற்றி நிற்க ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அர்ஷப் அகமதுவை 3 பேர் சுட்டுக்கொன்றனர். செய்தியாளர்கள் போல் வேடமிட்டு பேட்டி எடுப்பதுபோல் வந்த அந்த 3 பேரும் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அர்ஷப் அகமதுவை சுட்டுக்கொன்றனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அர்ஷப் அகமதுவை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

அப்போது, செய்தியாளர்கள் போல் வந்த 3 பேர் ஆதிக் அகமது, அர்ஷப் அகமதுவை சுட்டுக்கொலை செய்தனர். இந்த கொலை போலீசார் கண் முன்னே நடைபெற இந்த இரட்டை கொலையில் ஈடுபட்ட அருண் மவுரியா (வயது 22), லவேஷ் திவாரி (வயது 18), சன்னி சிங் (வயது 23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலையில் ஈடுபட்ட 3 பேர் மீதும் பல்வேறு குற்றவழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. தங்களை ரவுடிகள் என காட்டிக்கொள்ள இந்த கொலையில் ஈடுபட்டதாக 3 பேரும் விசாரணையில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒட்டுமொத்தமாக வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட முன்னாள் எம்.பி. ஆதிக் அகமதுவின் மனைவி ஷையிஸ்டா பர்வீன் மற்றும் உமேஷ் பாலை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கும்பலை சேர்ந்த ஹுடு முஸ்லிம், சபீர், அர்மென் ஆகிய 3 பேர் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உமேஷ் பால் கொலை வழக்கும் அது தொடர்பான என்கவுண்டர், துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் உத்தரபிரதேச அரசியலில் பெரும் பேசுபொருளும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story