5 கிலோ அரிசிக்கு பதிலாக பணம்; கர்நாடக மந்திரிசபை அதிரடி முடிவு


5 கிலோ அரிசிக்கு பதிலாக பணம்; கர்நாடக மந்திரிசபை அதிரடி முடிவு
x
தினத்தந்தி 28 Jun 2023 9:44 PM GMT (Updated: 29 Jun 2023 11:19 AM GMT)

அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் 5 கிலோ அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்க கர்நாடக மந்திரிசபை அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் மாதம் தலா ரூ.170 கிடைக்கும்.

பெங்களூரு:

அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் 5 கிலோ அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்க கர்நாடக மந்திரிசபை அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் மாதம் தலா ரூ.170 கிடைக்கும்.

கர்நாடக அரசு முடிவு

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவதாக அக்கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டது. சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்று, முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. உத்தரவாத திட்டங்களில் முதலாவதாக அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கும் சக்தி திட்டம் கடந்த 11-ந் தேதி தொடங்கப்பட்டது.

அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு மாதம் தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது ரேஷன் கார்டில் எத்தனை குடும்ப உறுப்பினர்கள் உள்ளார்களோ அவர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வீதம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

டெண்டர் விடும் பணி

இந்த திட்டம் ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார். ஆனால் மத்திய அரசு அரிசி கொடுக்க மறுத்துவிட்டதால், இந்த திட்டத்தின் கீழ் தலா 10 கிலோ அரிசி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

காங்கிரஸ் அரசை பா.ஜனதா தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். திட்டமிட்டப்படி வருகிற 1-ந் தேதி ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சி கூறியது. இதனால் கர்நாடக அரசு ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, சத்தீஷ்கார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்ய முடிவு செய்தது. ஆனால் அந்த முயற்சியும் கைகூடவில்லை. அதையடுத்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரிசி நிறுவனங்களிடம் இருந்தும் அரிசியை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க திட்டமிட்டது. அதற்கு டெண்டர் விடவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்த டெண்டர் பணிகள் முடிவடைந்து அரிசி கொள்முதல் செய்ய நீண்ட நாள் ஆகும் என தெரிகிறது.

பணம் கொடுக்க ஒப்புதல்

இந்த நிலையில் அன்னபாக்ய திட்டத்தின் கீழ் தலா 10 கிலோ அரிசி வழங்கும் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஏழை மக்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், போதிய அரிசி கிடைக்காததால், பயனாளிகளுக்கு தலா 5 கிலோ அரிசியுடன் மீதமுள்ள தலா 5 கிலோ அரிசிக்கு பதிலாக கிலோவுக்கு ரூ.34 என்ற வீதத்தில் ரேஷன் அட்டையில் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் தலா ரூ.170 பணம் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

சித்தராமையா பேட்டி

இதுகுறித்து முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு (வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர்) ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 5 கிலோவுடன் கூடுதலாக 5 கிலோ அரிசியை சோ்த்து 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தோம்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கத்தில் இந்திய உணவு கழகத்திடம் மாதம் 2.29 லட்சம் டன் அரிசி வழங்குமாறு கோரினோம். அந்த நிறுவனம் இந்த அரிசியை வழங்க தயாராக உள்ளதாக கூறியது.

செலவு செய்ய முடியாது

ஆனால் மறுநாளே அரிசி வழங்க முடியாது என்று அந்த நிறுவனம் கூறிவிட்டது. நான் டெல்லிக்கு சென்றபோது உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து, அரிசி வழங்குமாறு இந்திய உணவு கழக அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டேன். இதுகுறித்து அந்த அதிகாரிகளிடம் பேசுவதாக அவர் உறுதியளித்தார். மேலும் உணவுத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா மத்திய மந்திரி பியூஸ் கோயலை நேரில் சந்தித்து அரிசி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். அதற்கு அவர் அரிசி வழங்க முடியாது என்று கூறிவிட்டார்.

நாங்கள் ஏற்கனவே வருகிற 1-ந் தேதி இந்த அரிசி வழங்கும் திட்டத்தை வழங்குவதாக அறிவித்துவிட்டோம். ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிடம் பேசினோம். அவற்றில் சில மாநிலங்கள் அரிசி வழங்க முன்வந்தன. ஆனால் அவர்கள் கூறும் விலை அதிகமாக உள்ளது. பொதுமக்களின் பணத்தை இஷ்டம் போல் செலவு செய்ய முடியாது. தெலுங்கானா நெல் கொடுப்பதாக கூறியது.

முடிவை கைவிட்டோம்

ஆந்திரா 50 ஆயிரம் டன் அரிசி கொடுப்பதாக சொன்னது. அதனால் பிற மாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்யும் முடிவை கைவிட்டோம். பின்னர் மத்திய அரசின் மூன்று நிறுவனங்களிடம் இருந்து அரிசி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு டெண்டருக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளோம். இந்த பணிகள் நிறைவடைந்து அரிசி கிடைக்க ஒரு மாதம் ஆகலாம்.

அதனால் நாங்கள் சொன்ன வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், ஏழை மக்களுக்கு அதாவது 1.20 கோடி பயனாளிகளுக்கு 5 கிலோ அரிசிக்கு பதிலாக ஒரு கிலோ ரூ.34 விலையை கணக்கிட்டு பணமாக வழங்குவது என்று எனது தலைமையில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.

அதன்படி ரேஷன் அட்டையில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாதம் தலா ரூ.170 கிடைக்கும். 2 பேர் இருந்தால் ரூ.340-ம், 3 பேர் இருந்தால் ரூ.510-ம், 4 பேர் இருந்தால் ரூ.680-ம் கிடைக்கும். வருகிற 1-ந் தேதி முதல் இந்த அரிசி தொகை பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

பா.ஜனதா துரோகம்

அரிசி கிடைக்கும் வரை இந்த திட்டம் அமலில் இருக்கும். அரிசி கிடைத்தவுடன் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டு 10 கிலோ அரிசி வழங்கப்படும். மத்திய அரசு அரிசி வைத்துக்கொண்டு அதை கொடுக்க மறுக்கிறது. இதன் மூலம் கர்நாடகத்தில் ஏழை மக்களுக்கு மத்திய பா.ஜனதா அரசு துரோகம் செய்துவிட்டது.

இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.


Next Story