சட்டசபை தேர்தல்: மேகாலயாவில் 60 தொகுதிகளிலும் பா.ஜனதா போட்டி


சட்டசபை தேர்தல்: மேகாலயாவில் 60 தொகுதிகளிலும் பா.ஜனதா போட்டி
x

மேகாலயாவில் 60 தொகுதிகளிலும் பா.ஜனதா போட்டியிடுகிறது. அதேநேரம் நாகாலாந்தில் 20 இடங்களில் களமிறங்குவதாக அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் திரிபுராவில் வருகிற 16-ந் தேதியும், மேகாலயா, நாகாலாந்துக்கு 27-ந் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த மாநிலங்களில் தேர்தல் பணிகளை கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதற்கான வேட்பாளர் அறிவிப்பு, பிரசாரம் போன்ற பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

தனித்து களம் காண்கிறது

இந்த நிலையில் மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பா.ஜனதா அறிவித்து உள்ளது. அங்கு முதல்-மந்திரி கன்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்களின் கட்சியுடன் கூட்டணி அரசில் தற்போது நீடித்து வரும் நிலையில், வருகிற தேர்தலில் பா.ஜனதா தனித்து களம் காண்கிறது.

அதேநேரம் நாகாலாந்தில் கூட்டணி கட்சியான ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் இணைந்தே போட்டியிடுகிறது. அந்தவகையில் மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதியில், 20 இடங்களில் மட்டுமே பா.ஜனதா போட்டியிடுகிறது.

இந்த தகவல்களை பா.ஜனதா செயலாளரும், வடகிழக்கு மாநிலங்களுக்கான இணை பொறுப்பாளருமான ரிதுராஜ் சின்கா நேற்று தெரிவித்தார். மேகாலயாவில பிரதமர் மோடியை முன்வைத்து பிரசாரம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வேகமான வளர்ச்சி

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

மத்திய அரசின் திட்டங்கள் சென்றடைந்த போதும், வடகிழக்கு மாநிலங்களில் ஊழல் மற்றும் மெதுவான வளர்ச்சியே காணப்படுகிறது. எனவே ஊழல் இல்லாத அரசு மற்றும் வேகமான வளர்ச்சியை பிரதமர் மோடியால் மட்டுமே தர முடியும் என மக்கள் நம்புகின்றனர்.

அதன்பேரில் முதல் முறையாக மேகாலயா சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா களம் காண்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா சிறப்பாக செயல்படும்.

பிரதமர் மோடி தனது ஆட்சிக்காலத்தில் வடகிழக்கு பகுதிகளுக்கு 50 முறைக்கு மேல் சென்றுள்ளார். இது முந்தைய அனைத்து பிரதமர்களின் வருகையை விட அதிகமாகும்.

தேசிய முன்னுரிமை

கிழக்கு சார்ந்த கொள்கையை 'செயல் கொள்கையாக' பிரதமர் மாற்றியுள்ளார். அமைதியின் சகாப்தத்தைக் கண்ட இப்பகுதியில் நெடுஞ்சாலைகள், இணைய இணைப்பு, சாலைவழிகள் மற்றும் விமான நிலையம் போன்ற வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு உழைத்துள்ளது,

உண்மையில், வடகிழக்கு பிராந்திய தேவைகளை தேசிய முன்னுரிமை பட்டியலில் பிரதமர் மோடி இணைத்துள்ளார்.

இவ்வாறு ரிதுராஜ் சின்கா கூறினார்.

வாக்காளர்களை கவரும்

நாகாலாந்து மாநிலத்துக்கான பா.ஜனதா பொறுப்பாளர் நயின் கோலி கூறும்போது, 'பிரதமர் மோடியின் பணிகள், வளர்ச்சி மற்றும் அமைதியில் கவனம் செலுத்துதல் ஆகியவை நாகாலாந்து வாக்காளர்களை கவரும் முக்கியமான காரணிகள் என்று நம்புகிறோம்' என தெரிவித்தார்.

மேகாலயாவில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 47 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜனதா 2 இடங்களை வென்றது. எனினும் பிரதமர் மோடியை முன்வைத்து இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அந்த கட்சி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.


Next Story