கர்நாடகத்தில் அரசு ஊழியர்களுக்கு பணத்திற்காக பதவி வழங்குவது அதிகரிப்பு; ஜனதா தளம் (எஸ்) குற்றச்சாட்டு


கர்நாடகத்தில் அரசு ஊழியர்களுக்கு பணத்திற்காக பதவி வழங்குவது அதிகரிப்பு; ஜனதா தளம் (எஸ்) குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 July 2023 6:45 PM GMT (Updated: 13 July 2023 6:45 PM GMT)

கர்நாடகத்தில் அரசு ஊழியர்களுக்கு பணத்திற்காக பதவி வழங்குவது அதிகரித்துள்ளதாக ஜனதா தளம் (எஸ்) குற்றச்சாட்டி உள்ளது.

பெங்களூரு:

ஜனதாதளம்(எஸ்) கட்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

கர்நாடக மக்கள் இத்தனை நாட்களாக தக்காளி உள்ளிட்ட காய்கறி, உணவு தானியங்கள், சமையல் கியாஸ் உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டனர். தற்போது அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பணியிட மாற்றத்திற்கு விலை பட்டியலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது காங்கிரசின் 6-வது உத்தரவாத திட்டம். ஒருபுறம் இலவச திட்டங்கள், இன்னொரு புறம் உறுதியான கொள்ளை நடக்கிறது. இலவசம் மற்றும் கொள்ளையடிப்பது இரண்டையும் ஒன்றாக செய்வது தான் இந்த காங்கிரஸ் அரசின் வளர்ச்சி திட்டம். காங்கிரஸ் அரசு அமைந்து 2 மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் அரசு ஊழியர்களுக்கு பணத்திற்காக பதவி வழங்குவது என்பது அதிகரித்துவிட்டது. இலவச திட்டங்களால் மக்களை ஏமாற்றி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த காங்கிரஸ் அரசு இன்னும் 'ஹனிமூன்' காலத்தில் தான் உள்ளது. இப்போது நிலைமை இப்படி என்றால், இன்னும் வரும் நாட்களில் எந்த நிலைக்கு செல்வார்கள் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இந்த அரசுக்கு எதிராக மக்களின் கோபமும் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு ஜனதாதளம்(எஸ்) தெரிவித்துள்ளது.


Next Story