எனது இந்தியா எனது குடும்பம்.. எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு உருக்கமாக பதிலளித்த பிரதமர் மோடி


எனது இந்தியா எனது குடும்பம்.. எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு உருக்கமாக பதிலளித்த பிரதமர் மோடி
x
தினத்தந்தி 4 March 2024 10:55 AM GMT (Updated: 4 March 2024 11:08 AM GMT)

வாரிசு அரசியல் செய்யும் கட்சிகளின் முகம் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், ஒரே மாதிரியான குணத்தை கொண்டிருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்தார்.

அடிலாபாத்:

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

எனக்கு குடும்பம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இந்த நாட்டின் 140 கோடி மக்கள்தான் எனது குடும்பம். எனது இந்தியா எனது குடும்பம்.

என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் போன்றது. நம் தேச மக்களே என் குடும்பம்; இந்தியர்களுக்காகவே வாழ்கிறேன், எனக்காக அல்ல. என்னுடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் போன்றது. இது நாட்டு மக்களுக்கு தெரியும்.

நான் சிறிய வயதில் வீட்டை விட்டு வெளியேறியபோது, நாட்டு மக்களுக்காக வாழும் கனவுடன் புறப்பட்டேன். மக்களின் சேவகனாக பொது நலனுக்காக என்னை அர்ப்பணித்திருக்கிறேன்.

வாரிசு அரசியல் செய்யும் கட்சிகளின் முகம் பார்ப்பதற்கு வித்தியாசமாக தெரியலாம். ஆனால் பொய்களை சொல்லி கொள்ளையடிப்பதில் அந்த கட்சிகள் ஒரே மாதிரியான குணத்தை கொண்டுள்ளன.

தெலுங்கானா மாநிலத்தில் டிஆர்எஸ் கட்சி பிஆர்எஸ் ஆக மாறியது. ஆனால் வேறு எதையும் அந்த கட்சி மாற்றவில்லை. தெலுங்கானாவில் இப்போது காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால் அவர்களால் எந்த நன்மையும் நடக்கப் போவதில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், நாட்டில் கடந்த 15 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்ட பணிகளை பிரதமர் மோடி பட்டியலிட்டார்.


Next Story